ஜம்மு காஷ்மீரில் வன்முறை வெடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.. ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று அதன் செயற்குழு கூட்டம் காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டு ஆலோசனைக் கூட்டத்தில் ஆரம்ப நிலையில் மட்டும் பங்கேற்று விட்டு கிளம்பிச் சென்றார் ராகுல்காந்தி.
ஆனால் திடீரென இரவு 10 மணியளவில் மீண்டும் செயற்குழு கூட்டத்திற்கு அவர் வருகை தந்தார். ராகுல் காந்தியின் வருகை பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியது.
ஆனால் செயற்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே இரவு 10.45 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் கூறுகையில், "ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன. இது கவலை அளிக்கிறது. எனவே பிரதமர் அம்மாநிலத்தில் என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காகத் தான், நான் அவசரமாக செயற்குழுவிற்கு வந்தேன். இப்போது நான் மீண்டும் கிளம்பி செல்கிறேன். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை அவர்கள் தொடர்வார்கள். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் போராட்டம் நடத்துவதாக வெளியான ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலை, மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்திருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.