கூட்டுறவு வங்கிகள் பற்றியும் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்பாதீங்க.. ஆர்பிஐ விளக்கம்
டெல்லி: சில வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் தொடர்பாக பரப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிஎம்சி வங்கி என அழைக்கப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முறைகேடு புகார் காரணமாக அடுத்த 6 மாதத்திற்கு யாருக்கும் புதிதாக கடன் வழங்கவோ புதிய பணிகளை மேற்கொள்ளவோ கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. அத்துடன் அந்த வங்கி வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாக்கு மேல் டெபாசிட் பணத்தை எடுக்கக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட 9 வங்கிகள் மூடப்பட உள்ளதாக அண்மையில் வதந்தி வேகமாக பரவியது. இதற்கு அப்போதே ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்தது.
எனினும் தற்போது கூட்டுறவு வங்கிகள் தொடர்பாகவும், சில வங்கிகளின் செயல்பாடுகள் தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் வேகமாக வதந்தி பரவி வருகிறது. குறிப்பாக பல வங்கிகள் திவாலாகும் என்று வதந்தி வேகமாக பரவி வருகிறது. இதனால் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் மத்தியில் கவலையும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
அமலுக்கு வந்த எஸ்பிஐ வங்கியின் புதிய கட்டண நடைமுறை! குறைந்தபட்ச இருப்பு, பணம் எடுக்கும் அளவு மாற்றம்
இதையடுத்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட சில வங்கிகளைப் பற்றி சில இடங்களில் வதந்திகள் பரவி உள்ளது, இதன் விளைவாக வைப்புத்தொகையாளர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.
இந்திய வங்கி முறை பாதுகாப்பானது மற்றும் நிலையானது என்று ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறது. மேலும் இதுபோன்ற வதந்திகளின் அடிப்படையில் பீதி அடையத் தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொள்கிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.