ஜம்மு- காஷ்மீர் வான் பகுதிகளில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை.. உள்துறை அமைச்சகம்
டெல்லி: ஜம்மு- காஷ்மீர் பகுதிகளில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நேற்றைய தினம் பாகிஸ்தானுக்குள் சென்று இந்திய விமான படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் முகாம்கள் கூண்டோடு அழிக்கப்பட்டன.
இது பாகிஸ்தானுக்கு அச்சத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் எங்கள் மண்ணில் தாக்குதல் நடத்தவே இல்லை என பாகிஸ்தான் அரசு பொய் கூறி வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் பாகிஸ்தானின் விமானங்கள் இந்திய எல்லையில் பறந்தன. அப்போது இந்தியா அந்த விமானங்களை விரட்டியடித்தது. இந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் எல்லை அருகே பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் அத்துமீற முயன்றன.
அப்போது சாதுர்யமாக செயல்பட்ட இந்திய விமான படை அவற்றை விரட்டியடித்தது. இதுபோல் தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வருவதால் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் ஜம்மு- காஷ்மீர் வானில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, ஸ்ரீநகர், லே, பதான்கோட் விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.