அடுத்து தடுப்பு மருந்து பெறும் மாநிலங்கள் இவை தானாம்
புதுடில்லி : இரண்டாம் கட்டமாக 7 மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி, அடுத்த வாரம் துவங்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமான கேரளாவும் இதில் அடங்கும்.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் தற்போது 12 மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஜனவரி 16 ம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,46,598 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அடுத்தகட்டமாக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் பஞ்சாப், சண்டிகர், குஜராத், ஜார்கண்ட், கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் போன்ற 7 மாநிலங்களில் அடுத்த வாரம் முதல் செலுத்தப்பட உள்ளன.
தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், சில இடங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் பலவிதமாக தகவல்கள் பரவி வருகின்றன. தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை 123 சம்பவங்கள் நடந்துள்ளன.
பாலியல் குற்றங்கள்.. இந்தியாவில் அதிகரிக்கும் மரண தண்டனை - இனி கை வைத்தால் கைமா தான்!
தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டதாக இதுவரை 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பதற்கான நேரடி காரணங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.