இனியும் அஞ்ச மாட்டோம்.. சிறையை காட்டியும் அச்சுறுத்த முடியாது.. ஜாமீனில் விடுதலையான மாணவர்கள் பேச்சு
டெல்லி: சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இனியும் சிறையில் அடைப்போம் என்று அவர்களால் எங்களை அச்சுறுத்த முடியாது என்றும் அப்படி அவர்கள் எங்களை அச்சுறுத்தினால், அது எங்கள் போராட்டத்தை வீரியத்தைத் தான் அதிகப்படுத்தும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இருப்பினும், நாடு முழுவதும் சட்டத்திற்கு இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது.
குறிப்பாக டெல்லியில் மிகப் பெரியளவில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷப் டான்கா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி உயர் நீதிமன்றம்
இவர்கள் அனைவரையும் உபா சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஜாமீன் கோரி மூவர் தொடர்ந்த வழக்கு விசாரணை செய்த டெல்லி ஐகோர்ட் சில நாட்களுக்கு முன் மூவரும் ஜாமீன் வழங்கியது. மேலும் நாட்டில் உள்ள அனைவருக்கும் போராட்டம் நடத்தும் உரிமை உள்ளது என்றும் போராட்டம் நடத்துவது பயங்கரவாதம் இல்லை என்றும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் இவர்களை போலீசார் விடுதலை செய்யவில்லை.
அஞ்ச மாட்டோம்
இதனிடையே மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இன்று நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து வியாழக்கிழமை இரவு மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேவங்கனா கலிட்டா, "நீதிமன்றத்தின் தீர்ப்பால் அரசு விரக்தி அடைந்துள்ளதையே அவாக்களின் நடவடிக்கை காட்டுகிறது. நாங்கள் அவர்களை கண்டு எல்லாம் அஞ்சப்போவதில்லை" என்றார்.
போராட்டம் என்பது பயங்கரவாதம் அல்ல
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மூவருக்கும் வெளியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நட்டாஷா நிர்வால் கூறுகையில், "இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அதேநேரம் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். போராட்டம் நடத்துவது என்பது பயங்கரவாதம் அல்ல. அது பெண்கள் தலைமையில் அமைதியாக நடைபெற்ற ஒரு எதிர்ப்பு போராட்டம்.
மிரட்ட முடியாது
சிறையில் அடைப்போம் என்று அவர்களால் எங்களை அச்சுறுத்த முடியாது. அப்படி அவர்கள் எங்களை அச்சுறுத்தினால், அது எங்கள் போராட்டத்தை வீரியத்தை தான் அதிகப்படுத்தும்" என்றார். நட்டாஷா நிர்வால் சிறையிலிருந்தபோது தான் அவரது தந்தை கொரோனாவால் காலமானர். இது குறித்து நட்டாஷா நிர்வால் கூறுகையில், "சிறை என்பது அன்புக்குரியவர்களிடமிருந்து நம்மைப் பிரிக்கும். இது நமக்கு இதைத்தான் நினைவூட்டுகிறது" என்றார்.
மேல் முறையீடு
மேலும், அற்பமான குற்றச்சாட்டுகளுக்காக மக்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், ஒரு விஷயத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அது பயங்கரவாதம் ஆகாது என்றும் கூறினார். டெல்லி உயர்நீதிமன்றம் மூவருக்கும் அளித்துள்ள ஜாமீனை எதிர்த்து டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.