வறட்டு சாதி கௌரவத்தால் தர்ஷினி பிரியா கனகராஜ் படுகொலை.. நாடாளுமன்றத்தில் திருமாவளவன் எம்பி ஆவேசம்
Recommended Video
டெல்லி: கோவை மேட்டுப்பாளையம் அருகே நடந்த தர்ஷினி பிரியா- கனகராஜ் ஆணவ படுகொலை விவகாரம் தொடர்பாக சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவன், நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார்.
அண்மைக்காலமாக தமிழகத்தில் நடந்துவரும் சாதி ஆணவப்படுகொலைகள் மற்றும் அண்டை மாநிலங்களில் நடந்துவரும் ஆணவப்படுகொலைகள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "இன்று ஒரு முக்கியமான பிரச்னையை பற்றி அவையின் கவனத்துக்கு வைக்கிறேன். ஆணவ படுகொலை என்பது தேசிய அவமானம். நாடு முழுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இது சமுதாயமே வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய ஒரு குற்றச் செயல் ஆகும். சமீபத்தில் தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வர்ஷினி பிரியா என்ற இளம் பெண்ணும், அவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கனகராஜ் என்ற இளைஞரையும், கனகராஜின் பெற்றோர் மற்றும உடன் பிறந்தோர் படுகொலை செய்துள்ளார்கள். இந்த சம்பவம் என்பது சாதி கௌரவம் என்ற வறட்டு கௌரவத்தின் அடிப்படையில் நடந்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பழமநெரி என்ற பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் கேசவ் மற்றும் ஹேமாவதி ஆகியோர் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பச்சிளம் குழந்தையோடு ஊருக்கு திரும்பிய நேரத்தில் அந்த பெண்ணை கடத்தி சென்ற பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளார்கள். இவை தினந்தோறும் நாட்டில் நடக்கும் கொடூரமான குற்றச்செயல்" என திருமாவளவன் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
முன்னதாக நேற்று சாதி ஆணவ படுகொலை தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் "எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சாதி ஆணவக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அவரது தலைமையிலான அரசு ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு அக்கறை காட்டுவது இல்லை என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது. நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆவதற்குள்ளாக கொங்கு மண்டலத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டு இருந்தார்.