எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ஸ்காலர்ஷிப்- ஆண்டு வருமான வரம்பை ரூ8 லட்சமாக உயர்த்த திருமாவளவன் கோரிக்கை
டெல்லி: எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு ஆண்டு வருமான வரம்பு ரூ2.5 லட்சம் என்பதை ரூ8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் விரேந்தர் குமாரை தொல். திருமாவளவன் எம்.பி, விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் இன்று சந்தித்தனர். மத்திய அமைச்சர் விரேந்தர் குமாரிடம் 3 கோரிக்கைகளை இருவரும் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி. தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி மாவட்ட மற்றும் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டங்களை பல மாநிலங்களில் முறையாக நடத்துவதில்லை. நாடெங்கும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, அந்த கூட்டங்களை நடத்தும் படி மாநிலங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். பல்வேறு மாநிலங்களிலும் ஆணவக்கொலைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதையும் எடுத்துக் கூறினோம்.
போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு பல ஆண்டுகளுக்கு முன்னால் 2.5 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. EWS இட ஒதுக்கீட்டுக்கான ஆண்டு வருமான வரம்பு 8 லட்சமாக இருக்கும்போது எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு 2.5 லட்சம் என இருப்பது சரியல்ல. இதனால் கடைநிலை ஊழியராக இருக்கும் ஒருவரது பிள்ளைகூட ஸ்காலர்ஷிப் பெற முடியாத நிலை உள்ளது. எனவே 2.5 லட்சம் என்பதை 8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
பல்வேறு துறைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் பின்னடைவு காலிப் பணியிடங்கள் பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றன. அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தால் இந்த சமூகத்தினருக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டோம். கொள்கை முடிவு சார்ந்த விஷயங்களில் தமது அமைச்சகம் மட்டுமே முடிவெடுக்க முடியாது எனவே இது தொடர்பாக பிறரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. பதிவிட்டுள்ளார்.