பாஜகவுக்கு 40 வயசு.. வீடியோ காலில் தொண்டர்களிடம் பேசிய மோடி.. சோர்ந்து விடாதீர்கள் என கோரிக்கை!
டெல்லி: இது ஒரு நீண்ட காலப் போர். எனவே நாம் சோர்ந்து விடக்கூடாது. கண்டிப்பாக வெற்றி பெற்றே தீருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பாஜக துவங்கப்பட்ட 40வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் மத்தியில் வீடியோ மூலமாக இன்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியது:
இந்த வருடம் ஒரு இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. நமக்கு மட்டுமல்ல, மொத்த உலகுமே, அச்சுறுத்தலான காலகட்டத்தில் உள்ளது.
இந்த தொற்று நோய் தொடர்பான அபாயத்தை முதலில் நன்கு அறிந்து கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து மாநிலங்களின் உதவிகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், துரித கதியில் எடுக்கப்படுகிறது. நமது தடுப்பு நடவடிக்கையை, உலக சுகாதார நிறுவனமும் கூட பாராட்டியுள்ளது.
நாட்டு மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். சுய ஊரடங்கு காலகட்டமாக இருக்கட்டும், இப்போதைய லாக்டவுனாக இருக்கட்டும், மக்கள் அரசுக்கு துணை நிற்கிறார்கள். இந்தியா மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு. இங்கு சமூக விலகலையும், அரசு கூறும் விதிமுறைகளையும், மக்கள் பின்பற்றுவது கடினம் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால், இந்தியா சுய கட்டுப்பாட்டில், உலகத்திற்கே முன்னுதாரணமாக மாறியுள்ளது.
Addressing BJP Karyakartas. #BJPat40 https://t.co/aTZDkj3AA4
— Narendra Modi (@narendramodi) April 6, 2020
நான் வீட்டுக்குள் இருக்கலாம், ஆனால் எனக்காக மொத்த நாடும் போராடிக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறான்.
இது ஒரு நீண்ட காலப் போர். எனவே நாம் சோர்ந்து விடக்கூடாது. கண்டிப்பாக வெற்றி பெற்றே தீருவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பாஜக தொண்டர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முக கவசம் அணிவது, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை நாட்டுக்கும் உங்களுக்கும் நலன் பயக்கும். இவ்வாறு மோடி பேசினார்.