தேர்தல் முடிவுகள் எதுவானாலும் இனி முழுநேர அரசியல் தான்.. மனம் திறந்த பிரியங்கா காந்தி
டெல்லி: இனிமேலும் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தால் என்னை கோழை என்று நினைத்து விடுவார்கள். அதனால் தான் முழுநேர அரசியலில் இறங்கியுள்ளேன். நான் கோழையாக வாழ விரும்பவில்லை என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் போதெல்லாம் சோனியா மற்றும் ராகுலுக்கு மட்டுமே பிரியங்கா பிரச்சாரம் செய்து வந்தார். நடப்பு மக்களவை தேர்தலின் மூலம் அவர் நேரடி அரசியலில் குதித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொது செயலாளராக அவருக்கு பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் நேரடி தீவிர அரசியலில் கடந்த 3 மாதங்களாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பிரியங்கா காந்தி மனம் திறந்த பேட்டி அளித்துள்ளார். அதில் தனது சொந்த வாழ்கை மற்றும் அரசியல் வாழ்கை, எதிர்கால தீர்மானங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
பிரதமர் மோடியின் பேட்டியை டிவியில் பார்த்து உடனுக்குடன் கமெண்ட் கொடுத்த ராகுல் காந்தி
குடும்பத்தினரும் சப்போர்ட்
இந்த பேட்டியின் மூலம் மக்களவை தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் தாம் இனி அரசியலில் இருந்து பின்வாங்க போவதில்லை என பிரியங்கா கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் இனி கட்சியை வலுப்படுத்தும் பணிகளை செய்யப்போவதாக கூறியுள்ளார். இனி குடும்பத்தையும் அரசியலையும் சமாளிப்பதில் எனக்கு கஷ்டமில்லை. நான் அரசியலில் இருப்பதை என் குழந்தைகள் விரும்புகின்றனர். வீட்டு வேலை செய்து எனது அரசியல் திறமையை வீணடிப்பதாக என் மகன் என்னை அடிக்கடி கிண்டல் செய்வான் அவன் வெளிநாட்டில் இருந்தாலும் அரசியல் நிலவரத்தை கேட்பான். எப்போது நேரம் கிடைத்தாலும் எனது பிள்ளைகளுடன் தான் செலவழிப்பேன். அதனால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார்.
தீவிர அரசியலில் இறங்க காரணம்
நாட்டிலுள்ள ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதலின் போது வாயை மூடி மவுனமாக இருக்க பிடிக்கவில்லை. நமது அரசியல் சாசனம் திருத்தப்படும் போது நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும். இதற்கு தீவிர அரசியல் தான் தீர்வு என நினைத்தேன். மேலும் தீவிர அரசியலுக்கு வராவிட்டால் என்னை ஒரு கோழை என்று நினைப்பார்கள். பிறர் அப்படி நினைப்பதை என்னால் அனுமதிக்க முடியாது. மற்றவர்களை போல தான் நானும். வாழ்வுக்கு ஒரு அர்த்தம் கற்பிக்க விரும்புகிறேன் என பிரியங்கா கூறியுள்ளார்.
தனிநபர் தாக்குதல் நடத்தும் பாஜக
மேலும் பேசிய பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தி ஒருபோதும் தான் என்ற எண்ணம் இல்லாதவர். அவருக்கு துளிகூட அகங்காரம் கிடையாது. ஆனால் பாரதிய ஜனதாவோ அவரை தனிப்பட்ட முறையில் தாக்குகிறது. நாட்டை பற்றியும் அரசியல் மற்றும் அதிகாரம் உள்ளிட்டவற்றை நன்கு புரிந்தவர் ராகுல். அவருக்குள் பதவி ஆசை இல்லை. வெளியே இருந்து தான் அதிகாரம் அவரை தேடி வருகிறது. இதில் ராகுல் தெளிவாக இருக்கிறார். இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கும் இவ்வளவு தெளிவான சிந்தனை கிடையாது என புகழ்ந்தார்
என் தந்தையை நேரில் பார்க்காத மோடி
இந்திய அரசியலில் தற்போது பெண்களின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இன்னும் அதிக பெண்கள் நம் அரசியலில் ஈடுபட்டு உயர் பதவிகளை அடைய வேண்டும் என தாம் விரும்புவதாக குறிப்பிட்டார். அதே போல என் தந்தை ராஜீவ் காந்தி பற்றி எனக்கு தெரியும். என் தந்தையை பிரதமர் சந்தித்ததே இல்லை. எனவே அவரை பற்றி மோடி என்ன நினைக்கிறார் என்று கவலைப்படும் கடைசி ஆளாக தான் நான் இருப்பேன். என் தந்தையைப் பற்றி பிரதமரோ, மற்றவர்களோ தேவையின்றி விமர்சனத்தில் ஈடுபடுவது அரசியல் லாபத்திற்காக தான் என பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்