இந்த வருஷம் 5% இட ஒதுக்கீடு.. மீதி அடுத்த வருஷம்.. களத்தில் குதித்த ஐஐடி
டெல்லி: ஐஐடிகளில் 2019-2020 கல்வி ஆண்டு முதல் பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டில், 5 சதவிகிதம் முதலில் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான அரசியல் சாசன சட்ட மசோதா சமீபத்தில் முடிந்த நாடாளு மன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற மத்திய அரசின் சட்டங்களை மாநிலங்கள் நிறைவேற்ற தனியாக சட்டசபையிலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அமலாக்குவது வழக்கம்.
மசோதாவில் அதற்கான தேவை இல்லாதவகையில் அப்படியே இடஒதுக்கீட்டை மாநிலங்கள் அமலாக்க வகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ராஜ்யசபாவில் விளக்கம் அளித்திருந்தார். இந்த இட ஒதுக்கீட்டுக்கு குடியரசு தலைவரும் ஜனவரி 12ம் தேதி ஒப்புதல் அளித்ததையடுத்து, முதல் மாநிலமாக குஜராத் அந்த சட்டத்தை அமல் படுத்தியது.
மாநிலங்களில் தீவிரம்
பாஜக ஆளும் மற்ற மாநிலங்களும் இதை அமலாக்குவதில் தீவிரமாகி உள்ளன. இந் நிலையில் மத்திய அரசு நிதி உதவிபெறும் கல்வி நிறுவனங்களான ஐஐடிகளில் முதல் பகுதியாக 5 சதவிகித இட ஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
அறிக்கை வேண்டும்
மத்திய அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இருக்கின்ற கல்வி இடங்கள் மற்றும் பொருளாதார தேவைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து டெல்லி ஐஐடி இயக்குநர் வி. ராம்கோபால் ராவ் கூறுகையில், தற்போது 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் 5 சதவிகித இட ஒதுக்கீடு மட்டும் இந்த கல்வி ஆண்டு அமல்படுத்தவுள்ளோம்.
ஜன.31ம் வரை கெடு
பொருளாதார தேவைகள் குறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. இதுகுறித்து வரும் 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
அமல்படுத்துவதில் சிரமம்
ஆனால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐஐஎம்க்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் சிரமம் உள்ளது. அதனால் ஐஐஎம்களுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டில் இருந்த விலக்கு அளிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த மத்திய அரசு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.