விவசாய சட்டங்களால் கருப்பு பணம் ஈட்டியவர்களுக்குத்தான் பாதிப்பு- போராட்டங்களுக்கு எதிராக மோடி ஆவேசம்
டெல்லி: விவசாய சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமரியாதை செய்கிறார்கள் என்று அர்த்தம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
கருப்பு பண வரத்தை தடை செய்துவிட்டதால், சிலர் போராடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களை துவக்கி வைத்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அவர் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு நாட்டையே நம்பி இருப்பது ஆபத்து...டென்மார்க் பிரதமரிடம் சீனாவுக்கு குட்டு வைத்த பிரதமர் மோடி!!
வலுப்படுத்தும் திட்டங்கள்
மோடி மேலும் கூறுகையில், விவசாயிகள் சார்ந்த பல்வேறு சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் சார்ந்த சுகாதார திட்டங்கள் சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டன. நமது தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் போன்ற பிரிவினரை இந்த சீர்திருத்தங்கள் வலிமைப்படுத்தும்.
விவசாயிகள் வணங்குவார்கள்
ஆனால் சிலர் இந்த சீர் திருத்தங்களை எதிர்த்து வருகிறார்கள். கடவுளாக விவசாயிகள் எந்த விவசாய கருவிகளை வழிபடுவார்களோ, அது போன்ற கருவிகளையும், இயந்திரங்களையும் தீயிலிட்டு எரித்து விவசாயிகளை அவமரியாதை செய்து வருகிறார்கள்.
கருப்பு பணம்
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாறு விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது போன்ற வழிமுறைகளால் சட்டவிரோதமாக அவர்கள் சம்பாதித்து வந்தது தடுக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை ஈட்டுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டிராக்டர் எரிப்பு
பஞ்சாபில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தின்போது இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஒரு டிராக்டர் கொண்டு வரப்பட்டு தீயிலிட்டு எரித்து தங்கள் எதிர்ப்பு காட்டப்பட்டது. விவசாயிகள் போற்றி வணங்கக்கூடிய டிராக்டர் இவ்வாறு எரிக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. ஆனால் விவசாயிகளுக்கே வாழ்வாதாரம் இல்லை எனும்போது டிராக்டர் எரிக்கப்பட்டதை பெரிதாக பேசி விவகாரத்தை திசை திருப்புவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.