அமைதியை விரும்புகிறோம்.. அத்துமீறினால் விட மாட்டோம்.. ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி எழுச்சி உரை
டெல்லி: இந்திய ராணுவத்தின் மன உறுதி என்பது மலை போல உறுதியாக இருக்கிறது, உங்களது தைரியம் இந்த மலைமுகடுகளை விட உயரமாக இருக்கிறது என்று லடாக் பிராந்தியத்தின் நிம்மு பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
Recommended Video
சீன ராணுவத்தினர் எல்லைப்பகுதியில் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், இன்று முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென லடாக் விரைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்குள்ள நிம்மு பகுதியில் அவர் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பிறகு மதியம் 2 மணியளவில் ராணுவ வீரர்கள் குழுமியிருந்த பகுதியில் அவர்கள் முன்னிலையில் எழுச்சி உரையாற்றினார் மோடி.
முன்னறிவிப்பு ஏதும் இல்லை.. திடீரென விமானத்தில் கிளம்பி லடாக் சென்ற மோடி.. பெரும் பரபரப்பு
மன வலிமை
நான் மட்டும் கிடையாது, இந்த ஒட்டுமொத்த நாடும் ராணுவவீரர்களான உங்கள் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளது. உங்களது மனவலிமை உங்களை சுற்றியுள்ள இந்த மலைக் குன்றுகளை விட அதிகமானதாக இருக்கிறது. உங்களது வீரம் இந்த மலையின் உயரத்தை விட அதிகமாக இருக்கிறது. உங்களது வீரத்தால் இந்தியத்தாய் பெருமிதம் கொண்டு நிற்கிறாள். உங்களது அர்ப்பணிப்பு உணர்வு உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது.
வீர வணக்கம்
நீங்கள் காட்டி வரும் இந்த வீரம் உலக நாடுகள் அனைத்தாலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாடு உங்களது கைகளில் பாதுகாப்பாக இருக்கிறது. நீங்கள் பாரத மாதாவின் கவசங்கள். இந்தியா எந்த ஒரு சவாலையும் முறியடித்து வெற்றி பெறும் வலிமை கொண்ட நாடு.
வீரம் விளைந்த மண்
சுயசார்பு இந்தியா என்ற நமது கோஷம் ராணுவ வீரர்களான உங்களால் மேலும் வலுப்பெற்று கொண்டிருக்கிறது. இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் தனது நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறான். பாரதமாதா, தனது மகன்களின், வீரத்தை பார்த்து பெருமிதத்துடன் நிற்கிறாள். எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை. இந்தியா தொடர்ந்து வலிமை அடைந்து கொண்டே இருக்கிறது.
அமைதியோடு ஆவேசம்
இந்தியா அமைதியை விரும்பும் நாடு. இதை உலகம் பலமுறை பார்த்துள்ளது. அதேநேரம் நமது நிலப்பகுதியை பாதுகாப்பதில் நாம் என்றுமே அஞ்சி பின்வாங்கியது கிடையாது. புல்லாங்குழல் வாசித்த அதே கைகளில்தான் கிருஷ்ண பரமாத்மா சுதர்சன சக்கரத்தை வைத்திருந்தார். அமைதியை விரும்பும் அதே நேரத்தில், நம்மை சீண்டுவோரை நாம் விடுவது கிடையாது. வீரமுள்ளவர்கள்தான் அமைதியை விரும்புவார்கள்.
சீனாவுக்கு குட்டு
நாடு பிடிப்பது, எல்லைகளை விரிவாக்கும் காலம் முன்பு இருந்தது. இப்போது முடிவடைந்துவிட்டது. இப்போது வளர்ச்சி அரசியல் நடத்த வேண்டியதற்கான காலகட்டத்தில் வாழ்கிறோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 26 நிமிடங்கள் மோடியாற்றிய உரை, வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதை போல இருந்தது. பாரத் மாதா கி ஜே என்ற கோஷத்தோடு மோடி தனது உரையை நிறைவு செய்தார். தனது உரையில் சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை என்றபோதிலும், மறைமுகமாக சொல்ல வேண்டிய மெசேஜை அவர் சொல்லிவிட்டார்.