விவசாய சட்டங்கள் பற்றி தவறான பிரச்சாரம்... பின்னணியில் இவர்கள் தான்... பிரதமர் மோடி குற்றச்சாட்டு
டெல்லி: விவசாய துறையில் வெளிநாட்டு நிறுவனங்களைக் கொண்டுவர முயன்றவர்கள் தான் இப்போது விவசாய சட்டங்கள் குறித்து தவறான செய்திகளைப் பரப்புகின்றனர் என்று பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில் பகுதியில் மன்னர் சுஹெல்தேவ்க்கு சிலை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி சிலை அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பேசிய நரேந்திர மோடி, இந்திய வரலாற்றில் உள்ள முக்கிய தலைவர்களை முந்தைய அரசுகள் கவுரவிக்க தவறியதாக குற்றஞ்சாட்டினார். மேலும், அந்த தவறுகளைத் தனது அரசு சரி செய்ய முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தவறான பிரச்சாரம்
தொடர்ந்து விவசாய சட்டங்கள் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "இந்த விவசாய சட்டங்கள் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெரியளவில் பயன் அடைவார்கள். ஆனால், இச்சட்டங்கள் குறித்து இங்கு தொடர்ந்து சிலரால் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுவோரை விவசாயிகளே அம்பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
வெளிநாடு நிறுவனங்கள்
உத்தரப் பிரதேச விவசாயிகள் இந்த விவசாய சட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். விவசாய துறையில் வெளிநாட்டு நிறுவனங்களைக் கொண்டுவர முயன்றவர்கள் தான் இப்போது இச்சட்டங்கள் குறித்து தவறான செய்திகளைப் பரப்புகின்றனர். கடந்த காலங்களில் இதேபோன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்ள மற்ற கட்சிகளும் முயன்றன. ஆனால், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை" என்றார்.
விவசாய சட்டங்கள்
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமார் 18 மாதங்கள் வரை இச்சட்டத்தை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும், இச்சட்டங்கள் நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
முறையாகக் கவுரவிக்கப்படவில்லை
உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகளை அழகுபடுத்தும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும், முந்தைய அரசுகள் சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்துவிட்டு நேதாஜி, வல்லபாய் பட்டேல், அம்பேத்கர் போன்ற தலைவர்களைக் கவுரவிக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், சுதந்திரப் போராட்டத்திற்கு இந்தத் தலைவர்கள் செய்த தியாகங்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.