வைகோவுக்கு எதிராக போர்க்கொடி.. சசிகலா புஷ்பாவுக்கு மிரட்டல் போன் கால்கள்!
டெல்லி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா எம்பியாக பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று போர்க்கொடி உயர்த்திய சசிகலா புஷ்பாவுக்கு மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்புகள் வருகிறதாம்.
கருணாநிதிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் எப்படி அந்த விழா நடந்து கொண்டிருக்கும்போதே அஜித் எழுந்து எங்களை இதுபோன்ற விழாக்களுக்கு வரசொல்லி மிரட்டுகிறார்கள் என்று கூறினாரோ அதுபோல ஜெயலலிதா என்னை அடித்தார் என்று மாநிலங்களவையில் ஜெயலலிதாவுக்கு எதிராக முழங்கியவர் சசிகலா புஷ்பா. அதோடு ஜெயலலிதாவுக்கு எதிராக புகாரும் கொடுத்தார்.
ஜெயலலிதாவின் வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு புகாரை அவர் மீது தெரிவித்தது இல்லை. தெரிவித்து விட்டு சுதந்திரமாக நடமாடியதும் இல்லை. அதற்கான தைரியமும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ஒரு புகாரை தெரிவித்தார் சசிகலா புஷ்பா. இதுமட்டுமல்லாது இன்னும் பல சர்ச்சைகள் இவர் மீது உண்டு.
இளைஞர் ஒருவரிடம் பேசிய ஆடியோ, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவை பொது வெளியில் கன்னத்தில் அடித்தது என்று பல்வேறு சர்ச்சைகள் இருந்து கொண்டே வந்துள்ளது. இது அனைத்தையும் தாண்டி டெல்லியில் சில மாதங்களுக்கு முன்னர் ராமசாமி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த மறுமணத்திற்கு முன்னதாக அவரது கணவர் லிங்கேஸ்வரனை விவாகரத்து செய்ததாகவும் தகவல் உண்டு.
சட்டையை கழற்றி விட்டு கரூர் கோர்ட்டில் ஆஜரான முகிலன்.. கொல்ல முயல்வதாக பரபரப்பு புகார்
இந்த நிலையில் ராமசாமி என்னையும் எனது குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டு சென்று விட்டார் என்று ராமசாமியின் மனைவி போராட்டம் நடத்தியது வேறு கதை. இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்கையில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு தினகரனை ஆதரித்தார் சசிகலா புஷ்பா. இப்போது பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். சில காலம் அமைதியாக இருந்துவந்த அவர் இப்போது திடீரென்று மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.
சமீபத்தில் திமுக ஆதரவில் வைகோ நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சசிகலா புஷ்பா வைகோ எம்.பி.யாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று குடியரசுத் துணைதலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சட்டப்படி ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரால் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்றாலும், தேச விரோத கருத்துகளை பேசும் வைகோவை ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தில் பதவி பிரமாணம் ஏற்பதை அனுமதிக்ககூடாது என்று தனது கடிதத்தில் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.
இந்த கடிதத்தை தொடர்ந்து வைகோவின் அபிமானிகள் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சசிகலா புஷ்பாவுக்கு போன் போட்டு வகை வகையான வார்த்தைகளால் அர்ச்சித்து வருகிறார்களாம். இதனால் கோபமடைந்த சசிகலா புஷ்பா இது தொடர்பாக டெல்லி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இப்படி ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும் இப்படி வெளிநாடுகளில் வந்த போன் கால்களில் சிலவற்றை அட்டென்ட் செய்து அவர்களுக்கு பதில் அளித்தது லிங்கேஸ்வரனாம்.
இவர்தான் சசிகலா புஷ்பாவின் முன்னாள் கணவர். இவரை விவாகரத்து செய்துவிட்டுதான் ராமசாமி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். அதோடு சசிகலா தன்னிடம் இருந்த இரண்டு போன் நம்பர்களையும் மாற்றியுள்ளார். இப்போது புதிய எண்ணை பயன்படுத்துகிறாராம் சசிகலா புஷ்பா. ஆனால் அது தெரியாமல் பழைய எண்ணைத் தொடர்பு கொண்டவர்களுக்கு பழைய கணவர்தான் பதிலளித்துக் கொண்டுள்ளாராம்.