கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள்- அகாலி தளம் மோதல் ஏன்?
டெல்லி: பெருநிறுவனங்கள் கொழிக்கும் வகையில் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில்தான் மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதுதான் விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சிகளின் புகார். இதனால்தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளமும் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் மத்திய அரசு பல்வேறு அவசர சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டங்கள் தொடர்பான மசோதாக்கள், தற்போதைய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
ரஷ்யா தயாரிப்பு கொரோனா தடுப்பு மருந்து ஸ்புட்னிக்-V நவம்பரில் இந்தியாவில் கிடைக்கும்?
வேளாண் மசோதாக்கள்- எதிர்ப்பு
இத்தகைய மசோதாக்களில் முக்கியமானவை 3 வேளாண் மசோதாக்கள். மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 இல் திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்), விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி வேளாண் சேவைகள் ஆகியவற்றுக்கான அவசர சட்டங்களை பிறப்பித்திருந்தது. இந்த அவசர சட்டங்கள் விவசாயிகளின் எதிர்காலத்தையே சூனியமாக்கும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ போன்றோர் அப்போதே எச்சரித்திருந்தனர்.
பட்டியலில் இருந்து நீக்கம்
இந்த அவசர சட்டங்களுக்கான மசோதாக்கள்தான் தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 திருத்தம் என்பது தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவாகப் பயன்படும் எண்ணெய் வகைகள், உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்களிலிருந்து நீக்க வகை செய்கிறது. இதனால் சந்தையில் இந்த பொருட்களின் விலையை கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் தீர்மானிக்கும். இது விவசாயிகளுக்கு மிக மோசமான பேரிழப்பை ஏற்படுத்தக் கூடியது.
விற்பனை கூடங்கள்- கொள்முதல்
வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) மசோதாவானது, ஒரே நாடு; ஒரே வேளாண் சந்தை என்பதை நிலைநாட்டும் வகையில் கொள்முதலில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கிறது. இந்த சட்டத்தால் வேளாண் விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வதற்கு பதில் இனி கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் நிர்ணயிக்கிற அடிமாட்டு விலைக்கே விவசாயிகளிடம் கொள்முதல் செய்வார்கள். இதன்மூலம் விவசாயிகளுக்கு கிடைத்துவந்த சொற்ப கொள்முதல் விலையும் இனி கிடைக்காது. தனியார் நிர்ணயிக்கும் கொள்முதல் விலைக்கே வம்பாடுபட்டு உழைத்த விளைபொருட்களை அள்ளி கொடுத்துவிட்டு நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை வரும். ஆனால் மத்திய அரசானது, விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை இந்தியாவில் எங்கு கொண்டுபோய் வேண்டுமானாலும் வியாபாரம் செய்ய இது உதவும் என விளக்கம் தருகிறது.
விளைநிலத்தின் மீதான உரிமை
விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு), விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் சட்டமானது, ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட அனுமதிக்கிறது. இதன் மூலம் நிலத்தின் உரிமையும் கூட விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே கை மாறும் பேரபாயம் நிகழும். இத்தகைய காரணங்களால்தான் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இந்த வேளாண் அவசர சட்டம் மற்றும் மசோதாக்களுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு அடிபணிந்துதான் சிரோமணி அகாலி தளம் இப்போது மத்திய அரசை எதிர்க்கிறது.
ராஜினாமா பின்னணி
பஞ்சாப் மாநிலத்தில் தங்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்சம் வாக்குகளும் மண்ணோடு மண்ணாக புதைகுழிக்குப் போய்விடுமோ என்கிற அச்சத்தில் சிரோமணி அகாலிதளத்தின் ஹர்சிம்ரத் கவுர் தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அத்துடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகும் முடிவையும் அகாலி தளம் எடுக்க இருக்கிறது. விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்தால் பஞ்சாப்பி துடைத்தெறியப்பட்டுவிடுவோம் என்பது அகாலிதளத்தின் அச்சம்.