'புஷ்பா' படத்தை பார்த்து இளைஞரை கொலை செய்த 3 சிறுவர்கள்.. காரணம் கேட்டு ஆடிப்போன போலீஸ்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் புஷ்பா படத்தை பார்த்து இளைஞர் ஒருவரை கொலை செய்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து சமீபத்தில் திரையில் வெளியான திரைப்படம் புஷ்பா
செம்மரக் கடத்தலை கதைக்கருவாக கொண்ட இந்த படம் போதிய அளவு வரவேற்பு பெறவில்லை. ஆனால் நடிகர் அல்லு அர்ஜூனின் நடிப்பும், மேனரிஸமும் பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தை பார்த்துதான் கொலை செய்துள்ளனர் சிறுவர்கள்.
கொங்கு மண்டல தளபதி! செந்தில்பாலாஜிக்கு புதிய அடைமொழி சூட்டிய கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு!
புஷ்பா படம் பார்த்தனர்
டெல்லியில் ஜஹாங்கீர்புரி என்ற இடத்தை சேர்ந்த சிறுவர்கள் சில நாட்களுக்கு முன்பு புஷ்பா படத்தை தியேட்டரில் பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் ஜஹாங்கீர்புரி பகுதியில் கடை ஒன்றில் வேலைப் பார்த்துவந்த 24 வயது இளைஞரிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் மோதல் மூண்டது.
கொலை செய்தனர்
அப்போது ஆத்திரம் அடைந்த சிறுவர்கள் அந்த இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இளைஞர் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் கடந்த புதன்கிழமை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணம்
கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவர்கள் இளைஞருடன் வாக்குவாதம் நடத்தி கொலை செய்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் 3 சிறுவர்களையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், 'புஷ்பா' பட நாயகன் போன்று பிரபலமடைவதற்காக இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
'நான் யாருக்கும் அடங்காதவன் டா’
மேலும், படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன் அந்தப் படத்தில் பேசும் 'நான் யாருக்கும் அடங்காதவன் டா' என்ற அந்த டயலாக்கையும் சிறுவர்கள் போலீசாரிடம் பேசி காட்டியுள்ளனர். அல்லு அர்ஜூன் படத்தில் செய்யும் ஹீரோயிசம் போல் செய்து பிரபலமடைவதற்கு கொலை செய்ததாகவும், இதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட முயன்றதும் தெரியவந்தது. சிறுவர்கள் வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.