ஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ், ஐஎன்எக்ஸ்.. டென்ஷன் தரும் 3 வழக்குகள்.. நெருக்கடியில் ப.சிதம்பரம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரதுக்கு ஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ் விமானங்கள் கொள்முதல் மற்றும் ஐ.என்.எக்ஸ். மீடியா ஆகியவை தொடர்பான வழக்குகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது ஏர்செல்- மேக்சிஸ் நிறுவனங்கள் இடையே ரூ.3,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கினார் சிதம்பரம் என்பது வழக்கு,
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!
டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்
இந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆதாயமடைந்த மகன் நிறுவனம்
ப.சிதம்பரத்தை நெருக்கடிக்குள்ளாக்கி இருக்கும் மற்றொரு வழக்கு ஐ.என்.எக்.ஸ் மீடியா தொடர்பானது. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்த போது ரூ305 கோடி அன்னிய முதலீட்டைப் பெற்றது ஐ.என்.எக்ஸ் நிறுவனம். இந்த அன்னிய முதலீட்டை பெற்றுத் தந்ததால் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் ஆதாயம் அடைந்தது என்பது வழக்கு.
ப.சி. முன்ஜாமீன் மனு தள்ளுபடி
இவ்வழக்கில் தம்மை கைது செய்யாமல் இருக்க அடுத்தடுத்து ப.சிதம்பரம் தடை உத்தரவுகளை பெற்று வந்தார். தற்போது அவரது முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ஏர்பஸ் விமான கொள்முதல்
இதனிடையே ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 48 ஏர்பஸ் விமானங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்ற வழக்கில் வரும் 23-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் இருந்து ரூ70,000 கோடியில் விமானங்கள் வாங்கப்பட்டன.
சிதம்பரம் தலைமையிலான குழு மீது புகார்
இதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணை நடைபெற்று வருகிறது. 2007-ல் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரபுல் படேலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழுவே விமானங்களை கொள்முதல் செய்ததாக கூறினார். இதனடிப்படையில் வரும் 23-ந் தேதி சிதம்பரம் ஆஜராக அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.