தமிழகம் எதிர்த்தாலும்.. நாடு முழுக்க மும்மொழி கொள்கைதான்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு!
டெல்லி: நாட்டில் மும்மொழிக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை கொண்டு வருகிறது மத்திய அரசு. இதற்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பினார் லோக்சபா திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்.
5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக!
கேள்வி
மத்திய கல்வி அமைச்சகம் கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைப்படி மும்மொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படுகிறது என்றோ, அல்லது 2 மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றோ தமிழக அரசிடமிருந்து உங்களுக்கு பரிந்துரை வந்துள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்தார் தமிழச்சி தங்கபாண்டியன்.
மும்மொழிக் கொள்கைதான்
இதற்கு பதிலளித்துள்ள கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தமிழக அரசு சார்பில், 2 மொழிக் கொள்கையை பின்பற்றுவோம் என்று பரிந்துரை அனுப்பியுள்ளனர். ஆனால், நாட்டில் மும்மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். மூன்றாவது எந்த மொழி என்பதை மாநில அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விருப்பம் அது. புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழி பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அமைச்சர் திட்டவட்டமாக எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு உறுதி
இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் கூறுகையில், இந்த மூன்று நாள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் இங்கு இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். ஏறக்குறைய 1967ம் ஆண்டிலிருந்து இதைத்தான் பின்பற்றி வருகிறோம். இதையே நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம் என்று தெளிவுபடுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் எழுதியுள்ள கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில், இறுதியானதா, இதை அறிவிப்பாக வெளியிட்டு உள்ளதா என்பது பற்றி எல்லாம் ஆய்வு செய்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருச்சி சிவா
திமுக எம்பி திருச்சி சிவா கூறும்போது, அமைச்சரே பதில் சொல்கிறார் எனும்போது அது மத்திய அரசின் கொள்கைதான். இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. தமிழக அரசு இதை முழுமையாக எதிர்க்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்பது தான் திமுக நிலைப்பாடு. இது குறித்து மாநிலங்களவையில் நாங்கள் விவாதம் நடத்த உள்ளோம். இதற்காக நான்கு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த விஷயம் பற்றி நிச்சயமாக பேசுவோம். மும்மொழி புகுத்தலை தடுக்க வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அதிக பொறுப்பு ஆளும் அரசுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.