ராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்!
டெல்லி: நாடாளுமன்ற புலி என அழைக்கப்படும் மதிமுக பொதுச்செயலர் வைகோ வரும் 25-ந் தேதி ராஜ்யசபாவில் பதவி ஏற்கிறார். கொந்தளிக்கும் அரசியல் சூழலில் வைகோவின் பேச்சுகள் அனலைக் கிளப்பும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1978-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தொடர்ந்து திமுக எம்.பி.யாக ராஜ்யசபாவில் முழங்கியவர் வைகோ. 1998, 1999 லோக்சபா தேர்தல்களிலும் வைகோ வென்று எம்.பியானார்.
தற்போது 23 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜ்யசபாவுக்குள் மீண்டும் நுழைகிறார் வைகோ. வரும் 25-ந் தேதி வைகோ, திமுகவின் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோர் எம்.பி.க்களாக பதவி ஏற்கின்றனர்.
ராஜ்யசபாவுக்குள் நுழைந்த வைகோ
1978-ம் ஆண்டு எமர்ஜென்சியில் சிறைவாசம் அனுபவித்த வைகோவை ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைத்தார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் வழிகாட்டுதலில் ராஜ்யசபாவில் வைகோ உறுமல் அதிரவைத்தது. அதனால்தான் நாடாளுமன்ற புலி என்கிற பெருமை அவருக்கு கிடைத்தது.
வைகோவின் அனுபவங்கள்
தமது நாடாளுமன்ற அனுபவங்கள் குறித்து வைகோ பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில், அது நாடாளுமன்ற வரலாற்றில் பொற்காலம் எனலாம். இடதுசாரி தலைவ்வரான பூபேஷ் குப்தா, பிலூ மோடி, பேராசிரியர் என்.ஜி. ரங்கா, வாஜ்பாய், அத்வானி என ஜாம்பவான்கள் அப்போது நாடாளுமன்றத்தில் இருந்தனர். இவர்களிடம்தான் அர்ப்பணிப்பு உணர்வையும் எப்படி சபையில் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை தெரிவிப்பது என்பதையும் கற்றுக் கொண்டேன் என குறிப்பிட்டார்.
ராஜ்யசபாவில் தற்போதைய நிலை
தற்போதைய ராஜ்யசபாவில் ஜாம்பவான்கள் இல்லை. இடதுசாரிகள் பெரும் எண்ணிக்கையில் இல்லை. வலதுசாரிகளால் நிறைந்து இருக்கிறது ராஜ்யசபா. அதேநேரத்தில் வலதுசாரி குரல்களை கடுமையாக எதிர்க்கக் கூடிய, மாநில உரிமைகளை பேசக் கூடிய திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சி எம்.பி.க்கள் இருக்கின்றனர்.
சு.சுவாமிகள் அச்சம்
தாலாட்டிசைத்துக் கொண்டிருக்கும் ராஜ்யசபாவில் ஜூலை 25-ல் வைகோ எனும் புலி நுழைந்து என்ன உறுமலை காட்டுமோ? என்பது அவரது ஆதரவாளர்களின் பெரும் எதிர்பார்ப்பு. ஆனால் வைகோவை உள்ளே நுழையவிட்டால் கிழித்து தொங்கவிடுவாரோ எனும் பேரச்சத்தில் வலதுசாரிகள் இருக்கிறார்கள் என்பதைத்தான் சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்டர் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. வைகோவுக்கு பதவி பிரமாணமே செய்து வைக்க கூடாது என அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மனு கொடுக்கிறார்.
வைகோவால் உதறலில் சு.சுவாமி
நிச்சயம் சுப்பிரமணியம் சுவாமிக்கு குலைநடுங்கித்தான் போயிருக்கும். ஏனெனில் இதே சுப்பிரமணியன் சுவாமியை நாடாளுமன்ற வளாகத்தில் வைகோ மிரட்டியதும் ராஜ்யசபாவில் ஓடிப் போய் அய்யோ என்னை கோபாலசாமி கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்ததையும் அது தொடர்பாக நடந்த விவாதத்தில் வைகோ ‘ஆடிய ஆட்டத்தை'யும் அனுபவித்தவர் அவர். அவருக்கு ஈரக்குலை நடுங்கத்தான் செய்யும். அது வரலாற்று படிப்பினை என்பது மிகையல்ல.