டிக்டாக் செயலிக்கு தடை.. தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு.. அப்போ, இனி அவ்வளவுதானா?
டெல்லி: டிக் டாக் (Tiktok) செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
டிக் டாக் செயலி கலாசார சீரழிவுக்கு காரணமாக இருப்பதாக கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் அமர்வு, தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்தோனேசியா, அமெரிக்காவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளதை போல, இந்தியாவில் ஏன் தடை விதிக்க கூடாது என கேள்வி எழுப்பினர்.
சிறுவயது முதல் கொத்தடிமையாக இருந்த 85 வயது முதியவர்.. முதல்முறையாக வாக்களிப்பதால் நெகிழ்ச்சி
அறிக்கை
டிக் டாக் செயலியைத் தரவிறக்கம் செய்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர் நீதிபதிகள். மேலும் டிக் டாக் செயலியை முழுவதுமாக தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.
உச்சநீதிமன்றம்
இந்த நிலையில், உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவுக்கு எதிராக டிக் டாக் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில், விசாரணைக்கு வந்தபோது, டிக் டாக் தரப்பில், வழக்கறிஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
இடைக்கால தடை இல்லை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று, அபிஷேக் சிங்வி வாதிட்டார். ஆனால் இதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஹைகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு இடைக்கால உத்தரவாகும். மேலும், இந்த வழக்கை வரும் 16ம் தேதி உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உள்ளது. எனவே அவசரப்பட்டு அதன் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறிய உச்சநீதிமன்றம், ஏப்ரல் 22ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.
மத்திய அரசு
இதனிடையே, ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவை ஏற்று, மத்திய அரசு, டிக் டாக் செயலிக்கு தடை விதித்து, நாளைய விசாரணையின்போது அதை அறிக்கையாக தாக்கல் செய்யுமா அல்லது வேறு காரணம் சொல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.