காலம் கடந்து போச்சு.. தோத்துட்டோம்.. புரிஞ்சிக்கோங்க.. காங்கிரசில் கபில் சிபல் கலக குரல்
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டது என்று, அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அக்கட்சியின் செயல்பாடு பற்றி அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதிய 23 தலைவர்களில் கபில்சிபல் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.
பீகார் சட்டசபை தேர்தல்களில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் இருந்தது காங்கிரஸ். ஆனால் அந்தக் கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ் ஒரு மிக முக்கியமான பங்கு வகித்தது என்று சொன்னால் அது மிகை கிடையாது.
தேர்தல் திருவிழா- அதிமுக தேர்தல் பணிக்குழு, நவ. 20 அழகிரி, நவ. 21 அமித்ஷா, நவ.23 ஸ்டாலின் ஆலோசனை
பீகார் தேர்தல்
கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் போட்டியிட்ட இடங்களில் பாதிக்கு மேல் வெற்றியை குவித்தனர். ராஷ்ட்ரீய ஜனதா தளமும் அப்படி செய்தது. பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதில், சுமார் நான்கில் ஒரு பங்கு தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கி கை நீட்டி குற்றம் சொல்வதை பார்க்க முடிகிறது.
நாடு முழுக்க காங்கிரஸ் தோல்வி
அது மட்டும் கிடையாது.... 11 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் மோசமாக தோற்றது. மத்திய பிரதேசம், குஜராத் போன்ற காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்க கூடியதாக கருதிய மாநிலங்களிலும் அக்கட்சி கோட்டை விட்டது. கர்நாடகாவிலும் அவ்வாறுதான் நடந்தது. இது காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதன் நிலையில்தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு கபில் சிபல் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் காங்கிரஸ் கட்சி சுய பரிசோதனை செய்து கொள்ளும் காலம் முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது பாருங்கள்.
காங்கிரஸ் வீழ்ச்சி
பல்வேறு மட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்களை காங்கிரஸ் கட்சி செய்தாக வேண்டியுள்ளது. மக்கள் கேட்க விரும்பும் தலைவர்களை மீடியாக்களில் பேசவைப்பது, சுறுசுறுப்பு மற்றும் சிந்தனை திறன் மிக்க தலைமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சி தற்போது வீழ்ச்சி நிலையில் இருக்கிறது என்ற உண்மை நிலவரத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் தவறுகளிலிருந்து திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.
சுய பரிசோதனை காலம் ஓவர்
எந்தெந்த மாநிலங்களில் காங்கிரஸ் மாற்று சக்தியாக இருக்கிறதோ, அந்த மாநிலங்களில் கூட சமீபத்தில் நடந்த தேர்தல்களில் தோல்வியை அடைந்துள்ளது. எனவே காங்கிரசை மீது மக்கள் நம்பிக்கையை இழந்து உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. எனவேதான் காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ளும் காலம் முடிந்து விட்டதாகவே நான் கருதுகிறேன். இனிமேலும் சுயபரிசோதனை செய்து கொள்ள அவசியம் கிடையாது. ஏனெனில் நம்மிடம் ஏற்கனவே விடை உள்ளது. அதை ஆய்வு செய்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தேவை என்னவென்றால், நாம் தோல்வியடைந்து உள்ளோம் என்பதை திறந்த மனதுடன் அங்கீகரிப்பதுதான்.
தலைமை கேட்கவில்லை
தலைமையிடம் இருந்து எந்த ஒரு ஆலோசனையும் இதுவரை வரவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கப்படவில்லை. எனவே எனது கருத்துக்களை அங்கு தெரிவிக்க முடியவில்லை. அதனால்தான் ஊடகத்தின் வாயிலாக எனது கருத்தை தெரிவிக்கிறேன். நான் ஒரு காங்கிரஸ் கட்சிக்காரர். இனியும் காங்கிரஸ் கட்சிக்காரராகத்தான் இருப்பேன். இந்த நாட்டுக்கு தேவைப்படும் ஒரு மாற்று சக்தியை காங்கிரஸ் வழங்கும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறேன்.
மக்களை நோக்கி போக வேண்டும்
முன்பெல்லாம் நிறைய ஆலோசனைகள் நடைபெறும், அனுபவமிக்க அறிவாளிகள் தங்கள் கருத்துக்களை வழங்குவார்கள். எவ்வாறு மீடியாக்களிடம் சரியாக பேச வேண்டும் என்பதை அறிந்த தலைவர்கள் இருந்தார்கள். தங்களது பேச்சை மக்கள் கேட்க என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்த தலைவர்கள் இருந்தார்கள். நாம் தான் மக்களை நோக்கி செல்ல வேண்டும். மக்கள் நம்மை நோக்கி வருவார்கள் என்று இனியும் காத்து இருக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கூட்டணிகள் அவசியம். நாம் எவ்வாறு ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக இப்போது இருந்து இருக்க வேண்டுமோ அது போன்ற ஒரு சக்தியாக இல்லை என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது.
தானாக சரியாகும் என்று நினைப்பு
யாரெல்லாம் இதில் அனுபவம் வாய்ந்தவர்களாக உள்ளார்களோ அவர்களை காங்கிரஸ் கட்சி அணுகவேண்டும். உரையாட வேண்டும். அதை உடனடியாக செய்யவேண்டும். சட்டசபை தேர்தல் தோல்வி பற்றி இதுவரை காங்கிரஸ் தலைமை எதையும் பேசவில்லை. தலைமையை சுற்றியுள்ளவர்கள்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தானாக எல்லாம் சரியாகிவிடும் என்று தலைமை நினைத்து அமைதியாக இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. இவ்வாறு கபில் சிபல் தெரிவித்துள்ளார்.