விமானப் படையின் எம்.ஐ.17 ஹெலிகாப்டர்... 11 ஆண்டுகளில் 5 விபத்துகள்.. 42 பேர் உயிரிழப்பு
டெல்லி: தேசத்தின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விமானப் படையினர் எம்.ஐ.17 ஹெலிகாப்டரில் பயணித்த போது விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தனர். கடந்த 11 ஆண்டுகளில் விமானப் படையினர் எம்.ஐ. 17 ஹெலிகாப்டர் 5 விபத்துகளில் சிக்கியதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். விமானப் படைக்கு சொந்தமான எம்.ஐ.17 V5 ஹெலிகாப்டரில் பயணித்த போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ரஷ்யாவின் கஸான் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம்தான் நமது விமானப் படைக்கான எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்கியது. மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய இந்த ஹெலிகாப்டரில் 13,000 கிலோ எடையை தாங்கும் திறன் கொண்டது. ஆனால் இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளில் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்கள் 5 முறை விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இதில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் கருகிய உடல்கள்.. டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரம்!
சீனா எல்லை அருகே..
2010-ம் ஆண்டு அருணாசலப் பிரதேச மாநிலம் தவாங் அருகே எம்.ஐ.17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தவாங் விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சீனா எல்லை அருகே இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளனது. இதில் பயணித்த 11 விமானப் படை அதிகாரிகள் உட்பட 12 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
குஜராத் ஜாம்நகர்
2012-ம் ஆண்டு குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மற்றொரு எம்.ஐ.17 ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த ஹெலிகாப்டரில் 5 அதிகாரிகள் பயணித்தனர். ஜாம்நகர் விமானப் படை தளத்தில் புறப்பட்டு சிறிது தூரம் பயணித்த போது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் மொத்தம் 9 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இமயமலைப் பகுதியில்..
2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய யாத்ரீகர்களை மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் ஈடுபட்டிருந்த எம்.ஐ.17 ஹெலிகாப்டர் கவுரிகுண்ட் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் 8 வீரர்கள் படுகாயமடைந்தனர். 2018-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே விமானப் படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதில் பயணித்த 8 பேரும் உயிர் தப்பினர்.
Recommended Video
அருணாசலப் பிரதேசம், காஷ்மீர்
2019-ம் ஆண்டு அருணாசலப் பிரதேசம் தவாங் அருகே மீண்டும் எம்.ஐ.17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அருணாசலப் பிரதேசத்தின் சுனா வனப்பகுதியில் சீனா எல்லையில் இருந்து 12 கி.மீ தொலைவில் அதிகாலை 6 மணிக்கு நிகழ்ந்த இவ்விபத்தில் 7 பேர் மரணம் அடைந்தனர். அதே ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பட்காம் பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அப்போது பாகிஸ்தான் விமானப் படை விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவும் முயற்சிகளை மேற்கோண்டிருந்த பதற்றமான தருணம்.