ஓடும் பஸ்சில் கதறிய நிர்பயா.. மிருகம் போல வேட்டையாடிய காமுகர்கள்.. அன்று நடந்தது என்ன?
டெல்லி: ஒரு வழியாக 7 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை இதுதான்:
2012ஆம் ஆண்டு டிசம்பர் 16: சினிமா பார்த்துவிட்டு தனது நண்பருடன் பஸ்சில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த பேருந்துக்குள் வைத்து நிர்பயா (பயம் அற்றவள் என்ற பொருள் வரும் வகையில் பின்னர் பெயர் மாற்றப்பட்டு மீடியாக்களால் அழைக்கப்பட்டது) 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரத்தை எதிர்த்ததால், நிர்பயாவின் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் மனிதாபிமானம் கொஞ்சமும் இன்றி, 5 பேரும் மிருகம் போல தாக்கி ரத்தம் வழிய அடித்தனர். பிறகு பலாத்காரம் செய்தனர். அவரது நண்பரும் தாக்கப்பட்டு, இருவருமே ஆடைகள் அகற்றப்பட்டு, சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
2012, டிசம்பர் 17: முக்கிய குற்றவாளியான பஸ் ஓட்டுநர் ராம்சிங் கைது செய்யப்பட்டார். சில நாட்களில் இந்த குற்றச்செயலில் தொடர்புள்ள அவரது சகோதரர் முகேஷ் சிங், ஜிம் பயிற்சியாளராக இருந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டனர்.
2012, டிசம்பர் 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கூட்டு பலாத்காரம் மட்டுமின்றி கொலை வழக்கும் பதியப்பட்டது.
2013, மார்ச் 11: பேருந்து ஓட்டுநர் ராம்சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2013, ஆகஸ்ட் 31: குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவன் குற்றம் செய்ததை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்த சிறுவனை சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டுகாலம் அடைத்து வைக்க உத்தரவிட்டது.
2013, செப்டம்பர் 13: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிற நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2014, மார்ச் 13: நால்வரின் மரண தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
2014, மே-ஜூன்: குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதைப் பரிசீலித்து தீர்ப்பு வழங்கும் வரை மரண தண்டனையை நிறுத்தி வைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
2017 மே: குற்றவாளிகள் நால்வருக்கு எதிரான மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
2019, டிசம்பர் 10: அக்ஷய் சார்பில், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு
2019, டிசம்பர் 18: அக்ஷய் சீராய்வு மனு தள்ளுபடி
2020 ஜனவரி 7: குற்றவாளிகள் நான்கு பேரையும், ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட டெல்லி கோர்ட் வாரண்ட் பிறப்பித்தது.
ஜனவரி 17: முகேஷ்குமாரின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தள்ளுபடி செய்தார்
ஜனவரி 31: குற்றவாளிகள் வினய் சர்மா, மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் கருணை மனு நிலுவையில் உள்ளதால் டெல்லி விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை உத்தரவுகளை நிறுத்தியது
பிப்ரவரி 1: வினய் ஷர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி கோவிந்த் தள்ளுபடி செய்தார்
பிப்ரவரி 17: மார்ச் 3 ம் தேதி காலை 6 மணிக்கு நான்கு குற்றவாளிகளை தூக்கிலிட புதிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
மார்ச் 2: பவன் குப்தா தாக்கல் செய்த மறு சீராய்வு மனு உச்சநீதிமன்ற பெஞ்சினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது வேண்டுகோளில், அவர் மரண தண்டனைக்கு பதிலாக வாழ்நாள் சிறைவாசம் கோரினார்.
மார்ச் 5: பவன் குப்தாவின் கருணை மனு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் நிராகரிக்கப்பட்டது. நான்கு குற்றவாளிகளும் மார்ச் 20 ஆம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
மார்ச் 18: பவன்குப்தா ஒரு மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். குற்றவாளிகளின் வழக்கறிஞர் நான்கு குற்றவாளிகளும், இந்திய விசாரணைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தையும் அணுகியுள்ளதாக கூறினார். உச்சநீதிமன்றம், பவன் குப்தா, மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றம், பவன் குப்தா, மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
மார்ச் 19: விடிந்தால் தூக்கு என்ற நிலையில் வியாழக்கிழமை இரவு மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 3 குற்றவாளிகளும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டனர். ஆனாலும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மார்ச் 20: டெல்லி திஹார் சிறையில் இன்று காலை 5.30 மணிக்கு 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். 7 ஆண்டுகளுக்குப் பின்னர் நிர்பயாவுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது.