எங்களை ஆரோக்கியமாக வாழ விட்டால் போதும்.. ராஜ்யசபாவில் திருச்சி சிவா ஆவேசம்
டெல்லி: "நாங்கள் இந்தியா ஒரு பணக்கார தேசமாக இருக்க விரும்பவில்லை, ஆரோக்கியமான தேசமாக இருக்கவே விரும்புகிறோம்" என்று ராஜ்யசபாவில் ஆவேசம் காட்டியுள்ளார் திமுக எம்பியான திருச்சி சிவா.
திருச்சி சிவா இன்று ராஜ்யசபாவில், தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி உரையாற்றினார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டது, நிலத்தடி நீர் குறைந்துவிட்டது, காவிரியில் தன்ணீர் வரவில்லை. இதுபோன்ற காரணங்களால் காவிரி டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.
இப்படி ஒரு சூழலில்தான், மத்திய அரசு, தமிழகத்தில், ஹைட்ரோகார்பன் கிணறுகளை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தால் 1000 முதல் 2000 மீட்டர் ஆழம் தோண்டினால்தான் தண்ணீர் பெற முடிகிறது. தண்ணீர் பஞ்சம் அதிகரிக்கிறது. நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது.
பணக்கார தேசமாக நாம் இருக்க நாங்கள் விரும்பவில்லை, ஆரோக்கியமான தேசமாக இருக்க விரும்புகிறோம். புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை தோண்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டாம். தற்போதுள்ள கிணறுகளில் பணிகளை நிறுத்துங்கள்.
ஒருவேளை எண்ணை வளம் அதிகம் தேவை என்றால், இதுபோன்ற திட்டங்களை மனிதர்கள் வசிக்காத இடத்தில் செயல்படுத்துங்கள். எங்களுக்கு, எதிர்கால தலைமுறை குறித்து கவலை ஏற்படுகிறது. இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.