பிரதமர் மோடியிடமிருந்து திடீரென ஒரு தமிழ் ட்வீட்.. திருக்குறள் பற்றி புகழாரம்
டெல்லி: திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
சமீபத்தில் லடாக் சென்று ராணுவ வீரர்களை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி. வீரர்கள் மத்தியில் உரையாற்றியபோது, படைமாட்சி அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள, திருக்குறள் ஒன்றை அவர் குறிப்பிட்டார்.
"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு" என்ற திருக்குறளை அவர் உச்சரித்தார். பிறகு இதற்கு ஹிந்தியில் விளக்கமும் கொடுத்தார்.
"வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடத்தை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்." என்று இதற்கு மு.வரதராசன் தெளிவுரை எழுதியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
குவியும் பிரச்சினைகள்.. குமுறும் தலைவர்கள்.. முழு நேர தலைவர் இல்லாமல்.. தட்டு தடுமாறும் காங்கிரஸ்!
இந்த நிலையில், தமிழ் வார இதழ் ஒன்றில், மோடியின் திருக்குறள் உதாரணம் பற்றி எழுதிய கட்டுரையை, நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று ஷேர் செய்துள்ளார். மேலும், அதில் மோடி திருக்குறள் பற்றி மேலும் சில புகழுரைகளையும் தெரிவித்துள்ளார்.
திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். இவ்வாறு ஒரு ட்வீட் செய்துள்ளார் மோடி.
அடுத்த ட்வீட்டில், தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுவதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழில் ட்வீட் செய்துள்ள மோடி, இதே கருத்தை மற்றொரு ட்வீட்டில் ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளார்.