தாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை
டெல்லி: தாய்லாந்தில் இருந்து தமிழக இளைஞர் வெளியேற உதவி செய்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழக இளைஞர் மணிதுரை என்பவர் தாய்லாந்தில் இருந்து வெளியேறுவதற்கான உதவிகளை இந்திய தூதரகம் அளித்து வருகிறது. திருப்பூரில் உள்ள மணிதுரையின் குடும்பத்தினருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார்.
திருப்பூரை அடுத்த குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். பனியன் கம்பெனியில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் மனு அளித்துள்ளார். அதில், "என் மகன்களான மணித்துரை (வயது 23), மணிகண்டன் (வயது 21) ஆகியோரை குடும்ப வறுமையால் வேலைக்காக வெளிநாடு அனுப்ப முயன்றேன்.
அவிநாசியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் 2.70 லட்சம் ரூபாய் பெற்று இருவரையும் தாய்லாந்து நாட்டிலுள்ள பனியன் கம்பெனிக்கு ஜனவரி மாதம் அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு ஓட்டலில் வேலைக்கு சேர்த்துள்ளனர். சம்பளமும் வழங்கப்படவில்லை. கொத்தடிமையாக பணிபுரிந்துள்ளனர்.
திரு மணிதுரை அவர்களுக்கு தாய்லாந்திலிருந்து வெளியேறுவதற்கான அனைத்து உதவிகளையும் நமது தூதரகம் @IndiainThailand அளித்து வருகிறது.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 25, 2019
திருப்பூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு அனைத்து தகவலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
நான் ஓட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டு 88 ஆயிரம் ரூபாய் கொடுத்து மணிகண்டனை திருப்பூருக்கு வரவழைத்தேன். மூத்த மகன் மணித்துரையை மீட்க முடியவில்லை. திருப்பூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மகனை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து பதிலளித்த மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, மாரியம்மாள் மனு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் பரிந்துரைப்படி, மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.