மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி என்னை தாக்க முயன்றார்'..திரிணாமுல் காங். எம்.பி பரபர குற்றச்சாட்டு
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தன்னை தாக்க முயன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் குற்றம்சாட்டி உள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
ஆனால் பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டுள்ள எதிர்கட்சிகள் தினமும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன.
மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்
இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
கடும் அமளி
இந்த கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் பெகாசஸ் விவகாரம் குறித்து விளக்கம் அளித்து பேசிக் கொண்டார். ஆனால் அவரை பேச விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக் கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ்வை பேச விடாமல் செய்தனர்.
பேப்பரை பிடுங்கினார்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் திடீரென அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் வைத்திருந்த பேப்பரை பிடுங்கி கிழித்து எறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் தனது உரையை முடித்துக் கொண்டார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனுவின் செயலுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கடும் எதிர்ப்பு
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியூம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி,க்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சாந்தனு சென்னுக்கும், ஹர்தீப் சிங் பூரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தன்னை தாக்க முயன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.
தாக்க முயன்றார்
இது தொடர்பாக நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:- அவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், ஹர்தீப் சிங் பூரி திடீரென்று என்னை மிகவும் மோசமான முறையில் அழைத்தார். நானும் அவரது அருகில் சென்றேன் ஆனால் அவர் என்னை அச்சுறுத்தத் தொடங்கினார். திடீரென என்னை தாக்குவதற்கு முயற்சி செய்தார். உடல் ரீதியாக அவர் என்னைத் தாக்கப் போகிறார் என்பதை நான் அறிந்தேன்.
கடவுளுக்கு நன்றி
நல்லவேளையாக சக எம்.பி.க்கள் இதனை கவனித்து ஹர்தீப் சிங் பூரியிடம் இருந்து என்னை மீட்டனர். கடவுளுக்கு நன்றி. இந்த சம்பவம் முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது என்று சாந்தனு சென் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக துணை சபாநாயகர் ஹரிவன்சிடம் சாந்தனு சென் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.