லோக்சபாவில் தமிழ் வாழ்க போலவே பாஜகவை அதிரவைத்த திரிணாமுல்-ன் 'ஜெய் காளி! ஜெய் வங்களா'
டெல்லி: லோக்சபாவில் தமிழ் வாழ்க என முழக்கமிட்டு பாஜகவை அதிரவைத்தனர் தமிழக எம்.பிக்கள். அதேபோல பாஜகவினரின் ஜெய் ஶ்ரீராம் கோஷத்துக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸின் எம்.பிக்கள் ஜெய் காளி! ஜெய் வங்களா என முழங்கினர்.
17-வது லோக்சபாவின் தொடக்க நாட்களே பெரும் களேபரமாக களை கட்டியிருக்கிறது. பெரும்பான்மை பெற்ற பாஜக எம்.பிக்கள், பிற கட்சி எம்.பிக்கள் பதவி ஏற்கும் போது வெறுப்பேற்றுவதாக நினைத்துக் கொண்டு ஜெய் ஶ்ரீராம், வந்தே மாதாரம், பாரத் மாதா கீ ஜே என முழக்கங்களை எழுப்பினர்.
இந்த முழக்கங்களுக்கு மாநில கட்சிகளின் எம்.பிக்களும் சரியான பதிலடியை கொடுத்து பாஜகவை அதிர வைக்கின்றனர். திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க, திராவிடம் வெல்க என முழக்கங்களை எழுப்பினர்.
அதேபோல் 2-வது நாள் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள், சிறுபான்மை சமூக எம்.பிக்கள் வரிசையாக பாஜகவுக்கு பதில் கொடுத்தனர். ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஓவைசி உருது மொழியில் பதவியேற்றார். அப்போது பாஜக எம்.பிக்கள் கூச்சலிட அதற்கு பதிலடியாக, ஜெய் பீம், ஜெய் மீம், தக்பீர் அல்லாஹ் அக்பர், ஜெய் ஹிந்த் என முழக்கம் எழுப்பினார்.
சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. சஃபீயுர் ரஹ்மான் பார்க் பதவியேற்க வரும் போது வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே என பாஜகவினர் முழங்கினர். அத்துடன் பார்க், வந்தே மாதரம் என முழக்கமிடவும் பாஜக எம்.பிக்கள் உத்தரவிட்டனர். ஆனால் பதவியேற்ற பார்க், அரசியல்சாசனமைப்பு சாசனம் வாழ்க என முழக்கமிட்டதுடன் வந்தே மாதரம் என்பது இஸ்லாம் சார்ந்தது அல்ல என கூறிவிட்டு நகர்ந்தார்.
மற்றொரு சமாஜ்வாதி எம்.பி எஸ்.டி. ஹாசன் பதவி ஏற்க வரும்போது இந்துஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எதிரொலித்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் பதவி ஏற்க வந்த போது பாஜகவின் முழக்கங்கள் உச்சகட்டத்தை எட்டின.
திரிணாமுல் எம்.பி ககோலி கோஷ் டாஸ்திதார், பதவி ஏற்க வரும் போது ஜெய் ஶ்ரீராம் முழக்கங்களை எழுப்பினர். இதற்கு பதிலடியாக ஜெய் காளி! ஜெய் வங்களா! என உரத்த குரலில் தொடர்ந்து முழங்கியபடியே வந்து பதவி ஏற்றார். மற்றொரு திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி பதவி ஏற்ற பின்னர் சமஸ்கிருதத்தில் ஜெய் காளி என முழக்கம் எழுப்பினார். ஆனால் பாஜக எம்.பிக்களுக்கு அது என்ன என்று தெரியாமல் குழம்ம்பிப் போயினர்.
மேலும் கலீலுர் ரகுமான், அபு தாஹீர் கான் ஆகியோர் அல்லாவின் பெயரால் உறுதி மொழி ஏற்றனர்..