தொகுதிக்கு ரூ. 30 .8 லட்சம் மட்டுமே தேர்தல் செலவு செய்ய உத்தரவு : தமிழகத்தில் சாத்தியமா?
டெல்லி: தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் செலவு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்துள்ளார். இதில் தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
மேலும், தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுனில் அரோரா, புதுச்சேரியில் தொகுதிக்கு ரூ.22 லட்சம் செலவு செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் செலவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.
தொகையை உயர்த்திய தேர்தல் ஆணையம்
என்னது வெறும் 30.8 லட்சம் ரூபாயா? அரசியல் கட்சிகளின் செலவுக்கு இது மட்டும் போதுமா? உண்மையில், இந்த தொகை மட்டும் அவர்களுக்கு போதுமா என்பதே சாமானியனின் கேள்வியாக உள்ளது. இந்த 30.8 லட்சம் தொகையே தேர்தல் ஆணையம் சமீபத்தில் தேர்தல் செலவு தொகையை உயர்த்தி அறிவித்த பிறகு ஒதுக்கப்படும் அதிகபட்ச தொகையாகும். அதாவது, கொரோனா வைரஸ் முடக்கத்தினால், வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, வேட்பாளர்கள் 10 சதவீதம் கூடுதலாக தேர்தல் செலவுகளை செய்து கொள்ள மத்திய சட்ட அமைச்சகம் கடந்த ஆண்டு அனுமதி அளித்தது.
சட்டமன்ற தேர்தல்
இது தொடர்பாக 10% தேர்தல் செலவை உயர்த்தி மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் ரூ.77 லட்சம் வரை செலவு செய்யலாம். இது, முன்பு ரூ.70 லட்சமாக இருந்தது. அதேபோல் சட்டப்பேரவைத் தேர்தல்களில் நிற்கும் வேட்பாளர்கள் செலவு செய்யும் வரம்பு ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.30.8 லட்சமாக அதிகரிக்கப்படுவதாக அறிவித்தது. இந்த உத்தரவின்படி தான் தற்போது தேர்தல் ஆணையம், ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் தேர்தல் செலவு தொகையாக அறிவித்துள்ளது.
ஐந்து கோடி வரை...
ஆனால், உண்மையில் இந்த தொகையெல்லாம் நமது அரசியல் கட்சிகளுக்கு ஒரு பிடி மண்ணுக்கு கூட போதாது என்பதே யதார்த்தம். தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் ஒரு தொகுதிக்கு குறைந்தது 2 கோடி முதல் நான்கைந்து கோடி வரை செலவு செய்யும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
ஓட்டுக்கு பணம்
ஏனெனில், ஒரு தொகுதியில் பிரச்சாரம் செய்ய வேண்டுமெனில், தினசரி பிரச்சார செலவு, வாகன செலவு, பேனர், போஸ்டர், பொதுக்கூட்ட செலவு, ஆட்களை திரட்டல், தேர்தல் நாள் செலவு, இன்ன பிற அயிட்டங்களுக்கான செலவு என ஒரு தொகுதியில் மிகச் சாதாரணமாக ரூ.1 கோடியில் தொடங்கி 3 கோடி வரை செலவழிப்பார்கள் என்று கூறுகின்றனர் தமிழக அரசியலை பிரித்து ஆராயும் ஆய்வாளர்கள். இதில், கட்சிகளுக்கு அதிக செலவாவது, ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் தான்.
நீங்களே கணக்கிடுங்கள்
இதற்கு அடுத்து, தினசரி பிரச்சார செலவு தான் பெரிய செலவு என்கின்றனர். ஒரு தொகுதியில் ஒரு நாளைக்கு 10 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள் எனில், ஒரு இடத்துக்கு அட்லீஸ்ட் 10 ஆயிரம் செலவாகும் என்றால் கூட ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை செலவாகும். அப்படியென்றால் 30 நாள் பிரசாரம் என எடுத்துகொண்டால் நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்.
நம்பத் தான் வேண்டும்
இதில், வாகன செலவு தனி. தினம் இதற்கு மட்டும் 25 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. இது தவிர பொதுக்கூட்டம் நடத்த தனி செலவு, ஆட்களை திரட்ட செலவு, சாப்பாடு, எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா என்று ஏகப்பட்ட செலவுகள் உள்ள நிலையில், 30.8 லட்சம் எல்லாம் எம்மாத்திரம்!. இவ்வளவு செலவு செய்து தேர்தலை சந்திக்கும் கட்சிகள், மக்களுக்கு திருப்பி நல்லது தான் செய்யும் என்பதை நாம் நம்பித் தான் ஆக வேண்டும்.