'நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைகிறேன்'.. வெலிங்டனில் புகழஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!
டெல்லி: நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் பயிற்சி மையம் அருகில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Recommended Video
விபத்தில் உடல்கள் முற்றிலும் கருகி அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது. பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
நீலகிரி: ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு!
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும், தேவையான நடவடிக்கையை செய்யும்படி அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் மாலை விமானம் மூலம் கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக குன்னுர் சென்றார். விபத்து நடந்த பகுதிகளில் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை
இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு சென்றார். விமானப்படை கேப்டன் வருண்சிங் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், வெலிங்டன் ராணுவ மையத்தில் விபத்து தொடர்பாக ராணுவ அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
வீர வணக்கம்
அப்போது வைக்கப்பட்டு இருந்த விசிட்டர் புத்தகத்தில் கையெழுத்திடும் பகுதியில் ''தாய் திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிர் இழந்ததற்கு நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்'' என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்ட அவர்,
அனைத்து உதவிகளையும்...
''முப்படைகளின் தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்ததுமே குன்னூருக்கு விரைந்து; இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு மாநில அரசின் சார்பில் அனைத்து உதவிகளையும் வழங்கிட உறுதியளித்துள்ளேன். நாட்டுப் பணியில் துஞ்சிய வீரமகனுக்கு எனது வணக்கமும் அஞ்சலியும்'' என்று கூறியுள்ளார்.