தமிழக ஆளுநர் பன்வாரிலால் மாற்றப்படுகிறாரா? மகாராஷ்டிரா ஆளுநராகும் சுமித்ரா மகாஜன்? புதிய தகவல்கள்
டெல்லி: மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மாற்றவும் ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சி பொறுப்பு வந்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக மூத்த தலைவர்கள் பலருக்கு போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களை நாட்டின் பல்வேறு பெரிய மாநிலங்களுக்கு ஆளுநர்களாக கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது.
இதன்படி பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சுமித்ரா மகாஜன் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 76 வயதாகி விட்டதால் அவரை தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு மோடியும், அமித்ஷாவும் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் சுமித்ரா மகாஜனுக்கு மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமித்ரா மகாஜனுக்கு பூர்வீக மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். அந்த மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில்தான் அவர் பிறந்தார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஜெயந்த் மகாஜனை திருமணம் செய்த பிறகு இந்தூரில் குடியேறி விட்டார். எனவே மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவி சுமித்ரா மகாஜன் வழங்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. விரைவில் சுமத்ரா மகாஜன் மகாராஷ்டிரா ஆளுநராக பொறுப்பேற்பார் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் தான் பாஜக மூத்த தலைவர்களை ஆளுநராக கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கு வசதியாக சில மாநில கவர்னர்களை மாற்றவும் திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மாற்றவும் ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வந்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் ஆளுநர்களை மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.