பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு.. தமிழக அரசு மீது புகார்?.. பரபர தகவல்!
டெல்லி : தமிழகத்தின் கவர்னராக இருந்து வந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டதால் தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்து ஆர்.என்.ரவி தொடர்ந்து பிசியாக இருந்து வந்தார்.
கடந்த சில வாரமாக ஆளுநர் ஆர்.என்.ரவியை அடுத்தடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் சந்தித்தனர். தொடர்ந்து தமிழக அரசை குற்றம்சாட்டி வரும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
தமிழ்நாட்டில் முடிவுக்கு வரும் கொரோனா.. தொடர்ந்து சரியும் கேஸ்கள்.. உயிரிழப்பும் குறைகிறது!
ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும், தமிழக அரசு மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுநாளே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும், 7 தமிழர்கள் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து அவர் ஆளுநரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு குற்றச்சாட்டு
கடந்த 2 நாட்களுக்கு முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக மூத்த தலைவர்கள் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழக அரசு குற்றம் சுமத்தினார்கள். ஒரு புகார் மனு ஒன்றையும் கொடுத்தனர். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க முறைகேடு செய்தது தொடர்பாக அதில் குறிப்பிட்டு இருந்தனர். அடுத்ததாக முன்னாள் அமைச்சர்கள் மீதான சோதனை தொடர்பாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
பிரதமருடன் சந்திப்பு
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார். ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வலியுறுத்தி இருந்த நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு உள்ளிட்ட கோரிக்கையை பிரதமரிடம், ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துரைத்தாக தெரிகிறது.
பேசியது என்ன?
ஆனால் தமிழத்தில் தி.மு.க ஆட்சி செயல்படும் விதம், சட்ட ஒழுங்கின் நிலை ஆகியவை குறித்து பிரதமரிடம் ஆளுநர் பேசியதாகவும், அ.தி.மு.க.வினர் கொடுத்த புகார் தொடர்பாகவும் பிரதமரிடம் அவர் விவரித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்களையும் ஆர்.என்.ரவி சந்தித்து பேச உள்ளார்.