புதிய கட்டிடங்கள் கூடாது.. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மீண்டும் மனு
டெல்லி:முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்ட தடை கோரி, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு பராமரித்து வரும் நிலையில், அணையின் பலவீனத்தை முன் வைத்து நீர்ப்பிடிப்பு அளவை குறைக்க வேண்டும் என்று கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. அந்த வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
அணையின் அருகில் உள்ள நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் அமைக்கவும், கட்டிடங்கள் கட்டவும் கேரளா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடா்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:
அணைக்கு அருகில் உள்ள நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அங்கு புதிதாக கட்டிடங்கள் எதையும் கட்டக் கூடாது. ஏற்கனவே உள்ள கட்டிடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.