நாடாளுமன்றத்தில் எதிரொலித்த காவிரி நதிநீர், தமிழக குடிநீர் பற்றாக்குறை விவகாரம்
Recommended Video
டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் காவிரி நீரை கர்நாடகா உடனே திறந்துவிட வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் இன்று வலியுறுத்தினர். காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் கர்நாடகா எம்.பிக்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய போதே, காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடக் கோரி திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். அவர்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அமரச் சொன்னபோதும் பதாகைகளை ஏந்தி எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.
இன்றும் லோக்சபா, ராஜ்யசபாவில் காவிரி நீர் பிரச்சனையை தமிழக எம்.பிக்கள் எழுப்பினர். ராஜ்யசபாவில் அதிமுகவின் விஜிலா சத்தியானந்த், தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடகா உடனே திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் கர்நாடகாவில் உள்ள அணைகளை மத்திய அரசு தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்; காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
லோக்சபாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார், காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தினார். அவரது பேச்சுக்கு எதிராக கர்நாடகா எம்.பிக்கள் முழக்கமிட்டனர். அவர் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, தமிழகத்தின் குடிநீர் பிரச்சனையை சுட்டிக்காட்டி பேசினார். மேலும் தமிழகத்தின் நிலத்தடி நீரை மேம்படுத்துவது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கனிமொழிக்கு அனுமதி மறுப்பு
இதனிடையே போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் விவரங்களை அமைச்சர் ஸ்மிருதி இரானி லோக்சபாவில் தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது திமுக எம்.பி. கனிமொழி, துணை கேள்வி கேட்க முயன்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.