நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட தயார்.. ஊதியம் வேண்டாம்: தமிழக காவலர் சுபாஷ் சீனிவாசன்
டெல்லி: நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட தாம் தயார் என்றும் தமக்கு ஊதியம் வேண்டாம் என்றும் தமிழக தலைமை காவலர் சுபாஷ் சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.
2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நிர்பயா என்ற பெயரில் அந்த மருத்து மாணவி குறிப்பிடப்பட்டு வருகிறார். இச்சம்பவத்தில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்தர் தாக்கூர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
16 வயது சிறுவனுக்கு சிறார் நீதி சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
எஞ்சிய 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இவர்களது கருணை மனுக்களை டெல்லி துணை நிலை ஆளுநர் நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதியும் இந்த கருணை மனுக்களை நிராகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. இதனால் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் இருக்கும் திகார் சிறையில் தூக்கிலிடுபவர் பணிக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மைய தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன் விண்ணப்பித்துள்ளார். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தாம் அந்தப் பணியை செய்ய விரும்புவதாகவும் இதற்காக ஊதியம் எதுவும் தரவேண்டாம் என்றும் திகார் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் சுபாஷ் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.