தமிழகத்தில் பதிவு செய்தவர்களில் 34.9% பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டவர்கள்
டெல்லி: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்தவர்களில் இதுவரை 34.9% மட்டுமே போட்டுக் கொண்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்தவர்களில் 27.9% பேர்தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஜன.16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:
முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.18% பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டன. 0.002% தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உலக நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் பாதிப்பு குறைவாக உள்ள நாடு இந்தியாதான்.
முதல் நாளில் 2,07,229 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. உலக நாடுகளில் இந்தியாவில்தான் முதல்நாளில் கொரோனா தடுப்பூசி அதிகம் போடப்பட்டது. கடந்த 3 நாட்களில் மொத்தம் 3.81 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன.
நமது நாட்டில் தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்தவர்களில் 81% அளவில் போடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 71%, அருணாசல பிரதேசத்தில் 75% அளவுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் பதிவு செய்தவர்களில் 34.9%; பஞ்சாப்பில் 27.9% அளவுக்குதான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி கொரோனா பதிவு செய்தவர்களில் தடுப்பூசி போடப்படுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.