மோடி அழைப்பை ஏற்று இந்தியா வருகின்றனர் இலங்கை தமிழர் கட்சி தலைவர்கள்
டெல்லி: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் குழு இந்தியா வருகை தர திட்டமிட்டுள்ளது.
2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற மோடி முதலில் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து இலங்கை சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவையும் மோடி சந்தித்து பேசினார். தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கையின் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்ய இந்தியா அழுத்தம் தர வேண்டும் என்று மோடியின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
மோடி அழைப்பு
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க டெல்லிக்கு வருகை தருமாறு அப்போது தமிழர் தலைவர்களை பிரதமர் மோடி அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா வருகை தர உள்ளனர்.
குழுவில் யார் யார்?
இக்குழுவில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களது டெல்லி பயணத்தின் போது தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அரசியல் சாசன திருத்தம், யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தை கொழும்பைப் போல சர்வதேச விமான நிலையமாக்க இந்தியா உதவ வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளன.
திடீர் அக்கறை
மோடியின் கடந்த 5 ஆண்டுகாலத்தில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது ஈழத் தமிழர் மீதான கரிசனத்தை மோடி அரசு வெளிப்படுத்துகிறது.
காலூன்றும் முயற்சி
இப்படியாவது தமிழகத்தில் செல்வாக்கை நிலை நிறுத்த முடியுமா என்கிற அரசியல் கணக்கின் அடிப்படையில்தான் மோடி அரசு ஈழத் தமிழர் பிரச்சனையை கையிலெடுக்கிறது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் களத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது இல்லை. 2009 முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸ்தான் வென்றது என்பது வரலாறு. ஈழத்தை ஆதரித்து பேசுகிற வைகோவால் தேர்தல் களத்தில் வெல்லவே முடியாத நிலை இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.