எல்லையில் ஓயாத தொல்லை.. சீனாவை வழிக்கு கொண்டுவர.. இந்தியா கையில் எடுத்தது 'திரிசூல' வியூகம்!
டெல்லி: இந்தியா, பூடான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கக்கூடிய டோக்லாம் பகுதியில் 2017 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சீனா பூச்சாண்டி காட்டியது. ஆனால், கத்தி இன்றி ரத்தம் இன்றி அந்த பிரச்சனையை அப்படியே முடிவுக்கு கொண்டு வந்தது மத்திய அரசு.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்திய பேச்சுவார்த்தைக் குழு இதை சாதித்துக் காட்டியது. இப்போது லடாக் பகுதியில் பழையபடி பஞ்சாயத்தை கிளப்புகிறது சீனா.
இப்போதும் சண்டையின்றி பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை முடிவுக்கு வர வேண்டும் என்றுதான் நினைக்கிறது இந்தியா. ஆனால் சீனா இந்தமுறை கடுமையான பிடிவாதம் காட்டுகிறது. தனது போர் வீரர்களை அதிக அளவில் எல்லையில் குவித்துக் கொண்டே இருக்கிறது.
என்ன நடக்குது எல்லையில்.. போர் தொடுக்குமா சீனா.. பரபர தகவல்கள்
பிரதமர் ஆலோசனை
இந்த பதட்டமான சூழ்நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நேற்று இரவு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எந்த ஒரு சிறு மாற்றத்தையும் இந்திய அரசு அனுமதிக்காது என்று திட்டவட்டமான ஒரு மெசேஜ் சீனாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சீனா சீண்டல்
இந்தியாவிற்கு சொந்தமான இடத்தில் கூட உள்கட்டமைப்பை உருவாக்குவதை நிறுத்துமாறு சீனா இந்தியாவுக்கு கூறியுள்ளது. எல்லையில் இப்போதுள்ள நிலையை தொடர வேண்டுமாறு, சீனாவிடம் இந்தியா கேட்டுக் கொண்டதற்கு, இப்படி ஒரு பதிலை கொடுத்துள்ளது சீன நாடு. ஆனால் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது. ராணுவ ரீதியாக நடந்த 6 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
திரிசூல வியூகம்
இந்த நிலையில்தான், இந்த பிரச்சினையை சமாளிப்பதற்கான திரிசூல வியூகத்தை கையில் எடுத்துள்ளது இந்திய அரசு. திரிசூல வியூகம் என்பது மூன்று முக்கியமான நபர்களை கொண்டு காய் நகர்த்துவது. அதில் ஒருவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். இரண்டாவது முக்கிய பிரமுகர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். மற்றொருவர் முப்படைகளின் ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத். இவர்களை முன்னிறுத்தி இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்து சீனாவை பணிய வைக்க முயற்சிகள் தொடங்கியுள்ளன.
டோக்லாம்
டோக்லாம் விவகாரத்தின் போதும் அஜித் தோவல் திறம்பட செயல்பட்டுதான் சுமூகமாக இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார். எனவே, இந்த, கத்தி இல்லா, ரத்தமில்லா போரின், தளபதி அஜித் தோவல் என்கிறது அரசு வட்டாரங்கள். அஜித் தோவல், மற்ற இரு முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து, மும்மூர்த்திகள் போல, செயல்பட்டு, ராஜாங்க ரீதியிலான அழுத்தங்கள் வாயிலாக இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு காய் நகர்த்துகிறது இந்தியா. அது எந்த மாதிரி திட்டம் என்பது இப்போது வெளியிடப்படவில்லை.
தயார் நிலையில் முப்படைகள்
இதனிடையே, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் தளபதி மற்றும் முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தை நேற்று நடத்தினார். எல்லையில் சீனாவின் விஷமத்தனத்திற்கு, இந்தியா பதிலடி கொடுப்பது குறித்து பல்வேறு அம்சங்கள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் போது, ராஜ்நாத்சிங்கிடம், ராணுவத் தளபதி எம். எம். நாரவனே, எல்லையில் உள்ள நிலைமை குறித்து விளக்கினார். நரவனே இரண்டு நாட்களுக்கு முன்பு எல்லைக்கு சென்று நிலைமையை நேரில் பார்த்துவிட்டு வந்திருந்தார். இது ஒரு பக்கம் என்றால், மோதலை தவிர்த்து, திரிசூல வியூகத்தின் மூலம், வெற்றி காண்பதைத்தான் இந்தியா தனது முதல் விருப்பமாக வைத்துள்ளது.