டெல்லி நோக்கி புறப்படும்.. 40000 பெண் விவசாயிகள்.. சர்வதேச மகளிர் தினத்தில் போராட்டம்!
டெல்லி; இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்துவதற்காக 40000 பெண் விவசாயிகள் செல்ல உள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் 100 நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் செய்து வருகின்றனர் .
டெல்லியில் நடந்து வரும் இந்த விவசாயிகள் போராட்டம் நாட்டையே உலுக்கி உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நீண்ட போராட்டம் நடந்து வருகிறது. இதுவரை இந்திய அளவில் பேசப்பட்டு வந்த போராட்டம் நேற்று சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தது.
ஒவ்வொரு நாளும் இந்த போராட்டத்தில் ஒவ்வொரு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்துவதற்காக 40000 பெண் விவசாயிகள் செல்ல உள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெண் விவசாயிகள் டெல்லி நோக்கி இன்று செல்கிறார்கள். சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் பகுதியில் இவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். டெல்லி எல்லையை சுற்றி நடக்கும் இந்த போராட்டத்திற்கு இவர்கள்தான இன்று தலைமை வகிக்க போகிறார்கள்.
இந்த போராட்டத்தை ஒவ்வொரு பகுதிகளிலும் இன்று பெண் விவசாயிகள் முன்னெடுக்க உள்ளனர்.மொத்தம் 500 பேருந்துகள், 600 மினி பேருந்துகள், 115 டிரக்குகள், 200 சிறிய வாகனங்களில் பெண்கள் எல்லோரும் டெல்லி எல்லைக்கு சென்று உள்ளனர். இதனால் இன்று விவசாய போராட்டம் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.