இன்று ராஜ்யசபாவில் தாக்கலாகிறது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா.. வெற்றிபெறுமா? பாஜக எதிர்பார்ப்பு!
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Recommended Video
டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா வாக்கெடுப்பின் போது வெற்றிபெறுமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
1955ல் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் சட்ட திருத்தம் ஆகும். இந்த பழைய சட்டத்தின் படி, இந்தியாவில் பிறந்தவர்களும், இந்தியாவிற்கு முறையாக அனுமதியோடு வந்து 11 வருடங்கள் வாழ்ந்தவர்களும் மட்டுமே இந்திய குடியுரிமை பெற முடியும்.
ஆனால் தற்போது அதில் திருத்தம் மேற்கொண்டு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருக்கிறது பாஜக அரசு. இது ஏற்கனவே லோக்சபாவில் வெற்றிபெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன மசோதா
இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அதாவது அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், சமண மதத்தினர், இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் ஆகியோர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.
இந்தியாவில் கூடாது
இவர்களை இந்தியாவில் அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 6 வருடங்களில் இவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். இவர்களை கைது செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ கூடாது. ஆனால் இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது. அவர்கள் இந்தியாவில் முறையின்றி நுழைய இதுபோல அனுமதி கிடையாது.
மக்கள் கொதிப்பு
இந்த மசோதா வடகிழக்கு மாநிலங்களில் பெரிய கொதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் நிறைய வெளிநாட்டினர் முறையின்றி நுழைய வாய்ப்பு இருக்கிறது என்று மக்கள் போராடி வருகிறார்கள். தங்கள் கலாச்சாரம் மொத்தமாக இதனால் பாதிக்கப்படும் என்று இவர்கள் போராடி வருகிறார்கள். இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இன்று தாக்கல்
இந்த மசோதா ஏற்கனவே லோக்சபாவில் வெற்றிபெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் ராஜ்யசபாவில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாததால் அங்கு இந்த மசோதா வெற்றிபெறுமா என்பது சந்தேகமே.