தேசத்தின் பொக்கிஷம்.. போற்றுவோம்.. பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்!
புதுடெல்லி : நீர், நிலம், தெய்வம் என பெண்களை போற்றும் தேசம் நம்முடையது. பெண்மையை பாடாத கவிஞரும் இருக்க முடியாது. மற்றொரு புறம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேதனையான நிகழ்வும் இந்தியாவில் தான் நடந்து வருகிறது.
ஜான்சி ராணி, இந்திரா காந்தி, முத்துலட்சுமி ரெட்டி போன்ற ஏராளமான பெண் ஆளுமைகளை உலகிற்கு அடையாளம் காட்டிய இந்தியாவில் தான், உலகையே கலங்க வைத்த நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவமும் நடந்தது. பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 24, தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
பெண் குழந்தைகள் தினம் ஏன் :
2008 ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சம உரிமை கிடைப்பதை உறுதி செய்வது, பாலின சமநிலையை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த தினத்தை மத்திய அரசு உருவாக்கியது.
போக்சோ சட்டம் :
பெண் குழந்தைகளை உடல், மனம், சமூக ரீதியாக பாதுகாக்கவும், தன்னம்பிக்கை ஊட்டவும், மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட சட்டமே போக்சோ. பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்க இயற்றப்பட்டது. இச்சட்டம் அதிகம் பயன்படுத்தும் இந்திய மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் :
போக்சோ சட்டத்தின் மூலம் தண்டைகள் கடுமை ஆக்கப்பட்ட போதிலும் நாள்தோறும் 109 பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் கூறுகிறது. கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் ஆறுமடங்கு அதிகரித்துள்ளது என்ற மற்றொரு புள்ளி விபரம் கூறுகிறது.
தடுக்க என்ன வழி :
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்க மது, இணையதளம், ஆபாச படங்கள் என பல காரணங்கள் கூறப்பட்டாலும் அனைத்து குற்றங்களையும் தடுக்க தனிமனித ஒழுக்கமே முக்கிய தேவையாக உள்ளது. கண்ணை போல் வைத்து காக்கா விட்டாலும், பெண் குழந்தைகளை சக உயிராக பாவிக்கும் மனோபாவத்தை ஆண் குழந்தைகளிடம் பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். இது தான் தீர்வாக அமையும்.