இரு விஷயங்கள் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டன- ஜோதிராதித்ய சிந்தியா உருக்கம்
டெல்லி: இரு விஷயங்கள் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டன என பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா உருக்கமாக தெரிவித்தார்.
அதிகார போட்டி காரணமாக காங்கிரஸில் இருந்து விலகினார் மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவரும் கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிராதித்ய சிந்தியா.
இதனிடையே அவர் அமித்ஷாவுடன் சென்று பிரதமர் மோடியை சந்தித்ததால் அவர் நிச்சயம் பாஜகவில் இணைவார் என சொல்லப்பட்டது. அதன்படி அவர் இன்று மதியம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.
மோடிக்கு நன்றி
அங்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். அவரது முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதுகுறித்து ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் பாஜக தலைவர் நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு நன்றி.
முன் போல் இல்லை
என்னை வரவேற்று பாஜக குடும்பத்தில் இணைத்து ஒரு இடம் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரு விஷயங்கள் எனது வாழ்க்கையை மாற்றிவிட்டன. ஒன்று விமான விபத்தில் என் தந்தை இறந்த நாள். மற்றொன்று வாழ்க்கையில் மாற்று பாதையை தேர்வு செய்ய முடிவு செய்த நேற்றைய தினம். இந்த நாள் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. காங்கிரஸ் கட்சி முன் போல் இப்போது இல்லை.
உறுதி
காங்கிரஸ் கட்சி இளைஞர்களைப் புறக்கணிக்கிறது. மக்கள் சேவையாற்றுவது என்ற லட்சியத்தை காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு என்னால் செய்ய முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன் என தெரிவித்தார். 4 முறை மக்களவை உறுப்பினராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 2019-ஆம் ஆண்டு பாஜக உறுப்பினரிடம் தோல்வியை தழுவினார். இதையடுத்து மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற பாடுபட்டார்.
|
விலக முடிவு
இதற்கு பிரதிபலனாக காங்கிரஸ் தம்மை முதல்வராக்கும் என கருதியிருந்த நிலையில் அவருக்கு ஏமாற்றமே விஞ்சியது. கட்சியில் முக்கிய பொறுப்பும் கிடைக்காமல் ஆட்சியிலும் பொறுப்புகள் ஏதும் கிடைக்காததால் உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு அதுவும் கிடைத்தால்தான் உண்டு என்கிற நிலையில்தான் காங்கிரஸில் இருந்து விலக முடிவு செய்தார் சிந்தியா.