அயோத்தி வழக்கு.. ஜூலை 31 வரை பேச்சு நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி
டெல்லி: அயோத்தி விவகாரத்தில் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்கள் குழு, இன்று உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் வரும் ஜூலை 31-ம் தேதி வரை சமரச குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என, உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
இந்த குழுவுக்கு அயோத்தி நிலவிவகாரம் குறித்து பிரச்சனைக்குரியவர்களிடம் பேசி சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் இந்த சமரச குழு தனது அறிக்கையை வரும் ஆகஸ்ட் 15-க்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அயோத்தி விவகாரம் தொடர்பாக வழக்கு தொடுத்த நபரின் சட்டவாரிசான கோபால் சிங் விசாரத் என்பவர், உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்தார்.
அதில் அயோத்தி விவகாரத்தில் சமரச குழுவினால் எந்த பயனும் இல்லை. எனவே அந்த குழுவை கலைத்து விட்டு நீதிமன்றம் தலையிட்டால் தான் சரியாக இருக்கும் என கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சமரச பேச்சு தொடர்பான தற்போதைய நிலை குறித்து இன்றுக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி கலிபுல்லா தலைமையிலான மூவர் குழுவிற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று சமரச குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றம், வரும் ஜூலை 31ம் தேதி வரை மூவர் அடங்கிய மத்தியஸ்தர் குழு பேச்சுவார்த்தையை தொடரலாம் என உத்தரவிட்டுள்ளது
முன்னதாக இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால அறிக்கையை பார்த்து திருப்தி ஏற்படாவிட்டால், மனுதாரரின் கோரிக்கை படி சமரச குழுவை கலைத்து உத்தரவிட வாய்ப்பு இருந்தது
ஆனால் தற்போது இம்மாத இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் சமரசகுழுவிற்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது