'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி!
டெல்லி: வெங்காயத்தின் விலையை தொடர்ந்து தக்காளியின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. டெல்லியில் தக்காளி விலை ரூ.80க்கு விற்கப்படுவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தக்காளி விளைச்சல் அதிகம் உள்ள மாநிலங்களான மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தக்காளி விளைச்சல் அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தலைநகர் டெல்லிக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ரூ.45க்கு விற்கப்பட்ட தக்காளி விலை பின்னர் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது தக்காளி விலை 80க்கு விற்கப்படுகிறது. இதனால் டெல்லி மக்கள் தக்காளி இல்லாமல் எப்படி சமையல் செய்வது என்று வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில் இந்த விஷயத்தில மத்திய அரசு தலையிட்டது. அரசின் கடைகள் மூலம் தக்காளிக்கு பதில் தக்காளி கூல் பாக்கெட்டுகளை விற்க உத்தரவிட்டது. இதன்படி 200 கிராம் (800 கிராம் புதிய தக்காளிக்கு சமம்) தக்காளி கூழ் ரூ.25-க்கு விற்கப்படுகிறது. இதைப்போல 825 கிராம் கூழ் (2.5 கிலோ தக்காளிக்கு சமம்) ரூ.85-க்கும் விற்பனையாகிறது. ஆனால் சுவை சிறப்பாக இருக்காது என்று கருதி இதனை வாங்க மக்கள் யாரும் முன்வருவதில்லை.
தக்காளி உற்பத்தி செய்யும் மாநிலங்களில இருந்து அதிக அளவு தக்காளி டெல்லிக்கு வந்தால் மட்டுமே பிரச்சனை சரியாகும் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். ஆனால் தமிழகத்தில் தக்காளி விலை பெரிய அளவில் உயரவில்லை. இங்கு ஒரு கிலோ தக்காளி இங்கு ரூ.10 அல்லது ரூ.20 என்ற அளவில் தான் விற்கப்படுகிறது.