நாளை முதல் இந்த மாநில தலைவர்களெல்லாம் ஒரே பிஸி.. இவர்களின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கும் பாரதம்!
டெல்லி: வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் நாளை முதல் இந்த மாநிலத் தலைவர்களெல்லாம் ஒரே பிஸியாக இருப்பர். மத்தியில் ஆட்சி அமைக்க தேசிய கட்சிகள் முழுக்க முழுக்க மாநிலத் தலைவர்களையே நம்பியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவுள்ளது. இந்த நிலையில் மத்தியில் ஆள்வதற்கு பெரும்பான்மை 272 இடங்களாகும். இந்த அளவுக்கு பெரும்பான்மையை தனியாக பாஜகவோ அல்லது காங்கிரஸோ பெறாது என்று கூறப்படுகிறது.
இதனால் இந்த இரு கட்சிகளும் நிச்சயம் ஏதேனும் மாநில கட்சிகளின் துணையுடனே ஆட்சி அமைக்க முடியும் என கூறப்படுகிறது. என்னதான் கருத்து கணிப்புகளின்படி பாஜக கூட்டணி வெல்லும் என்றாலும் நிச்சயம் அக்கட்சிக்கு மாநில கட்சிகளின் ஆதரவு தேவைப்படும்.
தீர்மானிக்கும்
அது போன்ற நிலை வரும்போது மாநில கட்சித் தலைவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள். அந்த வகையில் திமுக நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என தெரிகிறது. அக்கட்சி 25 இடங்களுக்கு மேல் வெற்றியை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசை தீர்மானிக்கும் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்க அதிக வாய்ப்புண்டு.
நிச்சயம்
அடுத்தப்படியாக தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் 3 ஆவது அணியை அமைக்க தீவிரம் காட்டி வருகிறார். அவர் இந்த லோக்சபா தேர்தலில் 13 இடங்களில் வெல்வார் என கூறப்படுகிறது. எனவே அவரது ஆதரவை நிச்சயம் கோரப்படும்.
ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. எனவே மத்தியில் ஆட்சி அமைய அவரது ஆதரவும் நிச்சயம் கோரப்படும்.
மம்தா பானர்ஜி, மாயாவதி
மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது ஆதரவை நிச்சயம் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிகள் கோரும். இது போல் மிக அதிக தொகுதிகளை கொண்டுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி- அகிலேஷ் கூட்டணி 80 தொகுதிகளில் 50 தொகுதிகளிலாவது வெற்றி பெறுவர் என கூறப்படுகிறது. எனவே இவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறது. இது போல் நாளை முதல் ஆட்சி அமைக்கும் வரை இந்த தலைவர்கள் பிஸியாக இருப்பர்.