கத்தி கத்தி வத்தி போச்சு.. தேர்தல் பிரச்சாரத்தால் குரல் வளத்தை இழக்கும் நிலைக்கு சென்ற சித்து!
தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து பேசியதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பேச்சு திறனை இழக்கும் நிலைக்கு சென்று இருக்கிறார்.
டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து பேசியதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பேச்சு திறனை இழக்கும் நிலைக்கு சென்று இருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்காக தீவிரமாக உழைத்து வரும் நவ்ஜோத் சிங் சித்து, அங்கு மிக முக்கியமான தலைவராக பார்க்கப்படுகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவர் என்றும் கூறலாம்.
பாகிஸ்தான் சென்றது, அந்நாட்டு தலைவர்களை சந்தித்தது, பின் பஞ்சாப்பில் சொந்த காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் போக்கை கடைபிடிப்பது என்று நவ்ஜோத் சிங் சித்து நிறைய முறை சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
தொடர் பேச்சு
இவர் கடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். சட்டிஸ்கர், மிசோரம், மத்திய பிரதேஷ் தொடங்கி இன்று தேர்தல் நடக்கும் தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலத்திலும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இதனால் இவர் 17 நாட்கள் விடாமல் பிரச்சாரம் செய்துள்ளார்.
பெரிய பிரச்சனை
மொத்தம் 82 இடங்களில் இவர் மேடை போட்டு பேசியதாக கூறப்படுகிறது. இடையில் இவர் ஒருநாள் கூட ஓய்வு எடுக்கவில்லை. சிறு சிறு மேடைகளில் கூட, பல மணி நேரங்கள் கத்தி கத்தி தனது ஸ்டைலில் பேசி இருக்கிறார். இது இல்லாமல் தொலைக்காட்சி பேட்டிகளிலும் பேசியுள்ளார். இதனால் அவரது குரல் வளம் பாதிக்கப்பட்டு உள்ளது.
குரல் போனது
ஆம், இவர் இப்படி தொடர்ந்து பேசியதால் இவரின் குரல் வளமே மொத்தமாக போகும் நிலையை அடைந்து உள்ளது. கடந்த 24 மணி நேரமாக இவரால் பேச முடியவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை
இதே நிலைமை இன்னும் இரண்டு நாட்கள் நீடித்தால் இவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டி இருக்கும் என்கிறார்கள். அப்படி நடக்கும்பட்சத்தில் தொண்டையில் சிறிய ஆபரேஷன் செய்ய வேண்டி வரலாம் என்கிறார்கள். இதனால், அவர் மிகவும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.