தேசதுரோகமே இல்லை.. அரசை எதிர்க்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.. திஷா கைது பற்றி முன்னாள் நீதிபதி!
டெல்லி : 21 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைதுக்கு காரணமாக கூறப்படும் 'டூல்கிட்' குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா, இந்த டூல்கிட் ஆவணத்தை படித்து பார்த்ததில் அதில் "தேசத்துரோகம்" என்று சொல்லும் அளவுக்கு எதையும் நான் பார்க்கவில்லை என்றார்.
"எதிர்க்கட்சி அமைதியாக இருக்கும் நிலையில், இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அரசாங்கத்தை எதிர்க்க உரிமை உண்டு" என்று முன்னாள் நீதிபதி தீபக் குப்தா கூறினார். பத்திரிகையாளர் ஸ்ரீனிவாசன் ஜெயின் நடத்திய என்.டி.டி.வியின் விவாதத்தின் போது, திஷா ரவியின் கைது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து தீபக் குப்தா விமர்சித்தார்.
சமூக ஊடகங்களில் விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக சர்வதேச ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் பகிர்ந்து கொண்ட "டூல்கிட்"டை உருவாக்கியதாக சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவி என்ற 21 வயது கல்லூரி மாணவியை டெல்லி போலீசார் பெங்களூருவில் அண்மையில் கைது செய்தனர். அவரை 5 நாட்கள் காவலில் வைக்க டெல்லி மாஜிஸ்திரேட் கடந்த 14ம் தேதி உத்தரவிட்டார்.
திஷா ரவி கைது
சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்லூரி மாணவியுமான திஷா ரவி மீது இந்தியாவுக்கு எதிராக அதிருப்தியை உருவாக்குதல், இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்துதல், குற்றவியல் சதி போன்ற பிரிவுகளின் கீழ் தேசத்துரோக வழக்கில் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
நீதிபதி பங்கேற்பு
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மாணவியின் கைது விவகாரம் வடமாநில ஊடகங்களிலும், தேசிய ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை எழுப்பி உள்ளது. பத்திரிகையாளர் ஸ்ரீனிவாசன் ஜெயின் நடத்திய என்.டி.டி.வியின் விவாதத்தில் மூத்த வழக்கறிஞர்களான ரெபேக்கா எம். ஜான், சித்தார்த் லுத்ரா மற்றும் விகாஸ் சிங், மற்றும் வழக்கறிஞர் அபினவ் சந்திரசூட் ஆகியோருடன் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கலந்து கொண்டார்.
தேசதுரோகம் இல்லை
அப்போது முன்னாள் நீதிபதி தீபக் குப்தா பேசுகையில் "என் பார்வையில் வன்முறை அல்லது மக்களைத் தூண்டுவது தொடர்பாக அந்த குறிப்பிட்ட டூல்கிட்டில் எதுவும் இல்லை.. இந்த ஆவணம் எந்த வகையில் தேசத்துரோகமானது என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவர் போராட்டக்கார்களின் கருத்தில் உடன்படலாம் அல்லது ஏற்றுக்கொள்ளமாலும் இருக்கலாம்.அது வேறு விஷயம். ஆனால் இதை தேசத்துரோகம் என்று சொல்வது முற்றிலும் சட்டத்தை புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
1962 ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த கேதார் நாத் சிங் வழக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 ஏ இன் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது, இந்த தீர்ப்பின் படி வன்முறையைத் தூண்டுவது அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்றவற்றின் போது தான் தேசதுரோக வழக்கு பதிய முடியும்.
தவறாக பயன்படுத்தப்படுகிறது
தேசத் துரோகச் சட்டம் ஏகாதிபத்திய, காலனித்துவ ஆட்சியாளரான பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால் வடிவமைக்கப்பட்டது, அவர்கள் இந்தியாவை ஆள விரும்பினார். அந்த நேரத்தில் தான், இந்த சட்டம் தேசத்துரோகத்தை ஒரு மிகப் பெரிய குற்றமாக்கியது, ஆயுள் தண்டனையுடன் தண்டிக்கத்தக்கது ... எங்கள் அனுபவங்களுடன் நான் நம்புகிறேன் பால் கங்காதர் திலக் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் தேசத்துரோகத்திற்காக சிறைக்கு அனுப்பப்பட்டால், நாங்கள் இந்த சட்டத்தை ரத்து செய்திருப்போம், அல்லது குறைந்தபட்சம் இந்த விதிமுறையை குறைத்திருப்போம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது" என்று வேதனை தெரிவித்தார்.
நீதிபதி படித்திருப்பார்
திஷா ரவியை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பும் போது நீதித்துறை இதை கருத்தில் கொள்ளவில்லையா என்று கேட்கப்பட்டதற்கு, முன்னாள் நீதிபதி குப்தா, "ஜாமீன் எதற்கு சிறை எதற்கு என்பது குறித்த விதிகளை அவர்கள் (நீதிபதிகள்) மறந்துவிட்டதாகத் தோன்றும் பல வழக்குகளை நான் பார்த்திருக்கிறேன். காவல்துறை அவர்களிடம் கேட்பதை நீதிபதிகள் பார்க்கிறார்கள். இந்த கட்டத்தில் விரிவான ஆய்வு தேவையில்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் மனசாட்சி படி செயல்பட்டிருக்க வேண்டும். காவல்துறை உச்சநீதிமன்ற தீர்ப்பைப் படித்திருக்க மாட்டார்கள், ஆனால் நான் நீதிபதி குறைந்தபட்சம் அதைப் படித்திருப்பார் என்று எதிர்பார்த்தேன்" இவ்வாறு முன்னாள் நீதிபதி தீபக் குப்தா கூறினார்.
ஆஜர் ஆவது கடினம்
மூத்த வழக்கறிஞர் ரெபேக்கா எம். ஜான், கூறுகையில், பின்வரும் காரணங்களுக்காக இந்த [திஷா ரவியின் கைது] கைதை பற்றி நான் விமர்சிக்கிறேன். வார இறுதியில் கைது செய்வது, அதற்கான நடவடிக்கைகளை நான் எதிர்க்கிறேன். டெல்லி காவல்துறையினர் திங்கள் அல்லது செவ்வாயில் கைது செய்திருக்கலாம் ஏனெனில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்வதன் மூலம், வழக்கறிஞர்கள் ஆஜராகுவது மிகவும் கடினம் என்பதால், அவரின் சட்ட உரிமைகள் மீறப்படும். பெரும்பாலான வழக்கறிஞர்கள் தங்கள் கிளையட்கள் அப்படியான சூழலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள் என்பது கூட தெரியாது", என்றார்