மோடி அரசின் டாப் 5 தோல்விகளாக மக்கள் சொல்வது இவற்றைதான்.. இந்தியா டுடே சர்வே
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசின் டாப் 5 பெரிய தோல்விகள் என்ன என்று இந்தியா டுடே டிவி சேனல் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் மக்களின் மனநிலை தெரிய வந்துள்ளது.
நரேந்திர மோடி அரசு நான்கரை ஆண்டு கால பதவி காலத்தைப் பூர்த்தி செய்து விட்ட நிலையில், அதன் தோல்விகள் என்ன என்பது குறித்து இந்தியா டுடே டிவி சேனல் மற்றும் கார்வி இன்சைட்ஸ் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகின.
இந்த பட்டியலில், முதலிடத்தில் இருப்பது வேலைவாய்ப்பு. மொத்தம் 34% பேர் நரேந்திர மோடி அரசில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படாததுதான் மிகப்பெரிய தோல்வி என்று தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறியது தான் தோல்வி என்று 20 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இது இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள.து பொதுவாக எந்த அரசாக இருந்தாலும் இந்த குற்றச்சாட்டை தான் மக்களில் அதிகப்படியாக முன் வைப்பார்கள். ஆனால் வித்தியாசமாக இந்த பிரச்சினை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
மோடி அரசு எடுத்த தைரியமான நடவடிக்கை என்று ஒரு காலகட்டத்தில் பாராட்டப்பட்ட பணமதிப்பிழப்பு முடிவு, அரசின் தோல்வி என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மோடி அரசின் தோல்வி பட்டியலில் இது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
விவசாயிகள் தற்கொலை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் ஆகியவை தலா 7 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளன. இவைகள்தான் மோடி அரசின் டாப்-5 தோல்விகள் ஆகும்.