இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம்!
டெல்லி: 2019ம் ஆண்டுக்கான இந்தியாவின் தலை சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம் 4வது இடத்தை பிடித்துள்ளது.,
2018ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் பெரியகுளம் காவல் நிலையம் 8வது இடத்தை பிடித்து இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி மகளிர் காவல் நிலையம் இடம் பிடித்துள்ளது.
மத்திய அரசு ஆண்டு தோறும் இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த காவல் நிலையமாக அந்தமானில் உள்ள அபெர்தீன் காவல்நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மத்திய பிரதேசம்
இரண்டாவது இடத்தை குஜராத்தின் பலசினார் காவல் நிலையமும், 3வது இடத்தை மத்திய பிரதேச மாநிலம் புர்கன்புர் ஏஜேகே காவல் நிலையம் பிடித்துள்ளன.
தமிழக காவல் நிலையம்
4வது இடத்தை தமிகத்தின் தேனியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையம் பிடித்துள்ளது. 5வது இடத்தை அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அனினி காவல்நிலையம் பிடித்திருக்கிறது.
ராஜஸ்தான்
6வது இடத்தை டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல் நிலையம் பிடித்துள்ளது. 7வது இடத்தை ராஜஸ்தானின் ஜலாவரில் உள்ள பகானி காவல்நிலையமும், 8வது இடத்தை தெலுங்கானா மாநிலம் சோப்பதாந்தி காவல்நிலையமும் பிடித்துள்ளன.
பர்கவா
9வது இடத்தை கோவாவின் பிச்சோலியமும், 10வது இடத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பர்கவாவில் உள்ள காவல் நிலையமும் பிடித்துள்ளன.
பணி கலாச்சாரம்
நாட்டு மக்களிடம் இருந்து வரும் கருத்துக்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலின் படி பார்த்தால், காவல்துறையினர் தங்கள் பணி கலாச்சாரத்தை மாற்றி, தங்களை சேவை வழங்குநர்களாகக் கருதிக் கொள்ள வேண்டும். மேல்தட்டு(பணக்கார) மக்களிடம் செலுத்தும் கவனத்தை சாதாரண மனிதர்களிடம் காட்ட வேண்டும். நாட்டின் 80 சிறந்த காவல் நிலையங்களில் காவல்துறையினரிடமும், போலீசாரிடமும் கையாண்டவர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இந்த தரவரிசை பட்டியலின் படி வட இந்தியாவில் காவல்நிலையங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது.