லோக்சபாவில் பேசும்போது குறுக்கிட்ட அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்.. ஆவேசமான டி.ஆர்.பாலு.. கடும் விளாசல்
Recommended Video
டெல்லி: உங்களுக்கு முதுகெலும்பு இல்லை என்று, லோக்சபாவில், அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத்தை நோக்கி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆவேசமாக கூறியதால் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது.
காஷ்மீர் மறு சீரமைப்பு சட்ட மசோதா மீதான, விவாதத்தில், திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு இன்று விவாதம் நடத்தினார். அப்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவையில் இருந்தார்.
டி.ஆர். பாலு பேசியபோது மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். ஒரு கட்டத்தில், அவர் பேசியபோது, ரவீந்திரநாத் எதிர்ப்பு தெரிவித்தார். லோக்சபாவில் நடந்தது இதுதான்:
உங்களுக்கு முதுகெலும்பு இல்லை.. இடக்கையால் ரவீந்திர நாத்தை அமர வைத்த டி.ஆர் பாலு.. பரபர வீடியோ!
கட்டுப்படுத்த முடியவில்லை
டி.ஆர். பாலு பேசியதாவது: காஷ்மீர் விவகாரத்தில் உங்களிடம் என்ன தீர்வு இருக்கிறது? தினசரி தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி கொண்டு உள்ளனர். இந்திய எல்லையில் 7 ஊடுருவல்காரர்களை, சமீபத்தில், இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த உடல்களை எடுத்துச் செல்லுமாறு இரண்டு நாட்களாக பாகிஸ்தானிடம் இந்தியா கெஞ்சிக் கொண்டிருந்தது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அப்புறப்படுத்த கூட நமது நாட்டுக்கு வலிமை கிடையாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஊடுருவல்காரர்களை, உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லையில் மக்களின் பாதுகாப்பை உங்களால் உறுதி செய்ய முடியவில்லை.
என்ன கிடைக்கப்போகிறது
காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தால் நீங்கள் அடையப் போவதுதான் என்ன? இதை உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதிலுரையில் கட்டாயமாக தெரிவித்தாக வேண்டும். பாஜக தேர்தல் அறிக்கையில் சட்டப்பிரிவு 370 நீக்குவதாக வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அவசரகதியில் இதை செய்து உள்ளீர்களே, தவிர, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லை. இதனால் எந்த பலனையும் நீங்கள் அடையப் போவது கிடையாது.
விழிப்புணர்வு
எப்படியாவது, பெரும்பான்மை பெற்றுக்கொண்டு ஆட்சி அமைத்து விட்டு, சட்டப்பிரிவு 370 அகற்றிவிட வேண்டும் என்பதுதான் உங்கள் இலக்காக இருந்தது. உங்களால் எதற்காக தென்னிந்தியாவில் வெற்றி பெற முடியவில்லை. கேரளாவிலும், தமிழகத்திலும் உங்களால் வெற்றி பெற முடியவில்லையே எதற்காக? நீங்கள் சிரிக்கிறீர்கள், அணைக்கிறீர்கள். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. ஏனெனில் எலைட் மக்கள் உங்களோடு இல்லை. விழிப்புணர்வு பெற்ற மக்கள் உங்களுக்கு ஓட்டு போடவில்லை.
முதுகெலும்பு
இவ்வாறு டி ஆர் பாலு பேசியபோது, அதிமுக எம்பி ரவீந்திரநாத், எழுந்து நின்று, குறுக்கிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு சிரித்தபடியே பதில் சொன்ன டி ஆர் பாலு, "நீங்கள் உட்காருங்கள்.. உட்காருங்கள், உங்களுக்கு முதுகெலும்பு கிடையாது. நாடாளுமன்றம் என்பது முதுகெலும்பு இருப்பவர்களால் நிரப்பப்பட்டது. எனவே உங்களை போன்றவர்களுக்காக இது கிடையாது" என்று ஆவேசமாக தெரிவித்தார். அப்போது எழுந்த திமுக எம்பி கனிமொழி, "எதற்காக அவர் (ரவீந்திரநாத்) குறுக்கே பேசுகிறார்" என்று சபாநாயகரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
மேஜை தட்டி ஆரவாரம்
இதன் பிறகு பேச்சைத் தொடர்ந்த டி.ஆர்.பாலு, சபாநாயகர், எனக்கு முதுகெலும்பு இருப்பதால் என்னை பேசுவதற்கு அனுமதி அளித்து உள்ளார். முதுகெலும்பு இல்லாதவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை, என்றார். இவ்வாறு டி.ஆர்.பாலு, தெரிவித்ததும் அவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.